113 ஆசனங்களையும்விட அதிகமாக, பெற்று சஜித்தை பிரதமராக்குவோம்
(நா.தனுஜா)
நாட்டின் முக்கிய பிரச்சினைகளை விட்டுவிட்டு, சிறிய விடயங்கள் மூலம் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பி அதனூடாகப் பொதுத்தேர்தலில் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கக்கூடாது. இத்தகைய பொய் வாக்குறுதிகளை வழங்கும் தரப்பைத் தோற்கடித்து எதிர்வரும் பொதுத்தேர்தலில் 113 ஆசனங்களையும் விட அதிக ஆசனங்களைப் பெற்று சஜித் பிரேமதாஸவை பிரதமராக்குவோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
புதிய அரசாங்கம் நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்காகப் பொதுமக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வாக்களிக்கவில்லை என்று அண்மையில் இராஜாங்க அமைச்சரொருவர் கூறுகிறார். ஆனால் அரிசிக்கும், மரக்கறிகளுக்கும் உயர்வான விலையைச் செலுத்துவதற்காகவும் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை என்பதை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். தேர்தல் பிரசாரத்தின் போது பொருட்கள் மற்றும் எரிபொருள் விலையைக் குறைப்பதாகக் கூறியவர்களே தற்போது இவ்வாறு பேசுகின்றனர்.
இவ்வாறானதொரு நிலையில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் தற்போதைய அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுக்கொடுக்குமாறு பௌத்த தேரரொருவர் கோருகின்றார். எதிர்க்கட்சியாக இருக்கின்ற போதிலும் நாட்டுமக்களை முன்நிறுத்திய, அவர்களுக்கு நிவாரணமளிக்கக் கூடியவாறான திட்டங்களுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும், ஐக்கிய தேசிய முன்னணியும் பகிரங்கமாக அறிவித்திருக்கின்ற நிலையில் அவர்கள் ஏன் பெரும்பான்மையைக் கோருகின்றார்கள் என்று புரியவில்லை.
அதேபோன்று ஆளுந்தரப்பின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர், இனி ஜனநாயகம் தொடர்பில் பேசிப்பயனில்லை என்றும் ஏகாதிபத்தியவாதத்தின் ஊடாகவே நாட்டை நிர்வகிக்க வேண்டும் என்றும் கூறுகின்றார். ஆனால் சட்டத்தின் பிரகாரம் செயற்படும் நியாயாதிக்க அரசை உருவாக்குவதாக தேர்தலுக்கு முன்னர் வாக்களித்தார்கள். மேலும் தற்போது அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தைக் கொண்டுவருவது குறித்தும் பேசுகின்றார்கள். ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களை அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தத்தின் மூலம் மஹிந்த ராஜபக்ஷ வெகுவாக அதிகரித்திருந்தார். எனினும் நல்லாட்சி அரசாங்கம் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் மூலம் ஜனாதிபதியின் கட்டற்ற அதிகாரங்களைக் குறைத்ததுடன், சுயாதீன ஆணைக்குழுக்களை உருவாக்கியது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை அறிமுகம் செய்தது. மேலும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான செயற்திட்டங்களை மேற்கொண்டது.
இவையனைத்தையும் எமக்குப் பெரும்பான்மை இல்லாத போதிலும் 100 நாட்களுக்குள்ளாக மேற்கொண்டோம். ஆனால் இந்த அரசாங்கம் பதவியேற்று சுமார் 7 வாரங்கள் கடந்துள்ள நிலையிலும் அரச ஊழியர் ஊதியக்கொடுப்பனவு அதிகரிப்பு, மாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கல், பொருட்களின் விலைக்குறைப்பு உள்ளடங்கலாக தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை. பெறுமதிசேர் வரிக்குறைப்பின் காரணமாக அரசாங்கம் 500 பில்லியன் ரூபா வருமானத்தை இழந்திருக்கிறது. அதனை எவ்வாறு ஈடுசெய்யப்போகிறது? இவற்றில் அக்கறை காண்பிப்பதை விடுத்து, அரசியல் பழிவாங்கல்களிலேயே அரசாங்கம் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறது.
எனவே முக்கிய விடயங்களை விட்டுவிட்டு, சிறிய விடயங்கள் மூலம் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பி அதனூடாகப் பெர்துத்தேர்தலில் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கக்கூடாது. மக்கள் அவற்றை நம்பி ஏமாற்றமடையும் நிலை தற்போது மாறிவிட்டது. ஆகவே இத்தகைய பொய் வாக்குறுதிகளை வழங்கும் தரப்பைத் தோற்கடித்து எதிர்வரும் பொதுத்தேர்தலில் 113 ஆசனங்களையும் விட அதிக ஆசனங்களைப் பெற்று சஜித் பிரேமதாஸவை பிரதமராக்குவதே எமது எதிர்பார்ப்பாகும்.
If UNP joins with Muslims parties again, Singalese people will not vote for them like presidents election.
ReplyDeleteWe don't need unp here after. If unp wins tamil terrorism will raise again.
ReplyDelete