Header Ads



நாங்கள் எதிர்க்கட்சியாக செயற்பட, மக்களின் ஆதரவை கோருகிறோம் - JVP

கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாம் எதிர்பார்த்த அளவிற்கு மக்களின் ஆதரவு எமக்கு கிடைக்கவில்லை. ஆனால் பொதுத் தேர்தலில் எம்மை பிரதான எதிர்கட்சியாக மாற்றும் மக்கள் ஆதரவை கேட்கின்றோம் என மக்கள் விடுதலை முன்னணியினர் தெரிவித்துள்ளது.

அத்துடன் இன்று ஐக்கிய தேசிய கட்சிக்குள் நிகழும் அதிகார மோகமும் முரண்பாடுகளும் மக்களுக்கு நன்றாகவே தெரிந்துள்ளது. அவர்கள் ஆட்சியில் இருக்கும் போதும் குற்றவாளிகளை தண்டிக்க எந்த நடவடிக்கையையும் எடுக்காது குற்றவாளிகளை காப்பாற்றும் நடவடிக்கைகளையே முன்னெடுத்தனர். 

ஆகவே அவர்கள் எதிர்கட்சியாக அமர்ந்தாலும் கூட குற்றவாளிகளை காப்பாற்றும் வேலைத்திட்டம் மட்டுமே இடம்பெறும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் நகர்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜெயதிஸ்ஸ இதனைக் கூறினார். 

இம் முறை ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ மீது நம்பிக்கை வைத்து 69 இலட்சம் மக்கள் அவரை ஜனாதிபதியாக்கியுள்ளனர். அவர்களுக்காக மட்டும் அல்ல நாட்டில் சகல மக்களுக்காகவும் அவர் தனது கடமைகளை முன்னெடுக்க வேண்டும். அவருடன் இருக்கும் இனவாத, அடிப்படைவாத சக்திகள் கூறுவதை கேட்டு இறுக்கமான ஆட்சியை அவர் கொண்டு செல்லாது அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டினை கட்டியெழுப்ப வேண்டிய வேலைத்திட்டங்களை அவர் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் இதன்போது கூறினார்.

No comments

Powered by Blogger.