Header Ads



மனிதாபிமான பணியில் முப்படை, அடைமழை தொடருகிறது - பரீட்சை நிலையங்கள் வெள்ளத்தில் மிதப்பு


கிளிநொச்சியில் பெய்துவரும் அடை மழையால் இதுவரை ஆயிரத்து  635 குடும்பங்களைச் சேர்ந்த 5, 261பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை நிலையங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரிட்சை மண்டபம் மற்றும் கோட்டக்கல்வி அலுவலகம் பரீட்சை இணைப்பு நிலையம் ஆகியன வெள்ளத்தில் மூழ்கி காணப்படுகின்றன.

நேற்று மாலை முதல் பெய்து வரும் மழை காரணமாக 24 அடி நீர்கொள்ளளவைக்கொண்ட கல்மடுக்குளம் 2 அடி 6அங்குலத்திற்கு மேலாக வான் பாய்வதனால் வெளியேறும் நீரினால் தர்மபுரம் புளியம்பொக்கணை நெத்தலியாறு போன்ற கிராமங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், தர்மபுரம் பாடசாலையில் அமைந்துள்ள கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை மண்டபம் மற்றும் பரீட்சை இணைப்புநிலையம் கோட்டக்கல்வி அலுவலகம் என்பன வெள்ளத்தில் மூழ்கிக் காணப்படுகின்னறன.

இதேவேளை பெருமளவான வர்த்தக நிலையங்களும் நீரில் மூழ்கி காணப்படுகின்றன.

தாழ்நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு பிரதேச செயலக  உத்தியோகத்தர்கள்,  இலங்கை இராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் பொலிசாரின் உதவியுடன்பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கூடுதலான இடங்கள் போக்குவரத்துக்கள் செய்யமுடியாத நிலையில் வீதிகளை மூடி வெள்ளம் பாய்வதனால் படகுகள் மூலமும் உழவு இயந்திரங்கள் மூலமும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை தர்மபுரம் பகுதியில் பாதிக்கப்பட்டஇடங்களிலிருந்து மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் த.குருகுலராஜா மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் களத்தில் இருந்து செயற்பட்டுவருகின்றனர்.

இதுவரை ஆயிரத்து  635 குடும்பங்களைச் சேர்ந்த 5261பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments

Powered by Blogger.