மகிந்தவை நான் நெல்சன் மண்டேலாவாக மாற்ற நினைத்தேன் - கோத்தபாய என் சிறந்த நண்பர்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நான் நெல்சன் மண்டேலாவாக மாற்றி நினைத்த பொழுது அவர் அவரது சகோதரர்களுடன் இணைந்த ரொபர்ட் முகாபே ஆனார் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் பின்னர் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் அமைப்பை மாற்றி அமைக்குமாறு தாமே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்ததாகவும் இன்று -28- கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அந்த நேரத்தில் தாம் கூறியதை சரியாக பின்பற்றியிருந்தால் இன்றும் நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே.
ஆனால் அவர் தமது சகோதரர்களுடன் இணைந்து சர்வாதிகாரியாக செயற்பட்டமையினாலேயே மக்கள் இவரை நிராகரித்தார்கள்.
கோத்தபாய ராஜபக்சகூட என்னுடைய நல்ல நண்பன். நான் அமைச்சராக இருந்த போது நான் கேட்ட அனைத்து விடயங்களையும் அவர் செய்து கொடுத்தார். அதனை நான் மறுக்கவில்லை.
இருந்தாலும் கோத்தபாய ஒரு சர்வாதிகாரியாக செயற்படுவது எனக்கு பிடிக்கவில்லை. அந்த ஒரு காரணத்திற்காகவே நான் அவரை எதிர்க்கின்றேன்.
அவர் நினைத்தப்படியே அவர் செயற்படுவார். அப்படியான ஒரு நபர் நாட்டின் தலைவர் பதவிக்கு பொறுத்தமற்றவர் என்பதே எனது வாதமாகும்.
மகிந்தவின் ஆட்சியின்போது கோத்தபாய ராஜபக்ச இராணுவத்தினரை நடத்தியவிதம் படுமோசமானதாக இருந்தது.
இராணுவத்தினர் கைக்கூலிகளாக காணப்பட்டனர். பல ஆண்டுக்காலம் நாட்டை ஆட்சி செய்ய சந்தர்ப்பம் அவர்களுக்கு இருந்தபோதும் அவர்கள் செயற்பட்ட விதத்தினால் மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள்.
இம்முறை ஜனாதிபதியாக கோத்தபாய பதவியேற்றாலும் அதுவே நடக்கப் போகின்றது. எனவே இம்முறை தேர்தலில் அதனையே நாம் சிந்திக்க வேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment