Header Ads



3 விடயங்களை அடிப்படையாக கொண்டே, ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு

மூன்று விடயங்களை அடிப்படையாக கொண்டே ஜனாதிபதி வேட்பாளர் தெரிவுசெய்யப்படுவார் என திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். சனிக்கிழமை காலை தோப்பூரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்படும் நபர் மக்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்றவராகவும் கூட்டணி கட்சிகளால் விரும்பப்படுபவராகவும் சர்வதேச நாடுகளின் ஆதரவை பெற்றவராகவும் இருக்க வேண்டும். இந்த மூன்று விடயங்களை அடிப்படையாக கொண்டே ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவுசெய்யப்படுவார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் சஜித் பிரேமதாச, சபாநாயகர் கரு ஜெயசூரிய ஆகியோரில் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்படுவர்.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு உள்ளது. கிராமப்புறங்களை பொறுத்தவரையில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் சஜித் பிரேமதாசவையே விரும்புகின்றனர்.

கரு ஜெயசூரியவை பொறுத்தவரை பெரும்பான்மை சிங்கள மக்களால் பெரிதும் மதிக்கப்படும் கறைபடியாத அரசியல் வரலாற்றை கொண்டவர். 52 நாள் அரசியல் குழப்பத்தை முறியடிப்பதில் பெரும் பங்காற்றியவர். சர்வதேசத்தின் நன்மதிப்பு பெற்றவர்.

ஆகவே எல்லா விடயங்களையும் ஆராய்ந்து மூவரில் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராகவும் மற்றொருவர் பிரதமர் வேட்பாளராகவும் அனைவரின் ஆதரவுடன் விரைவில் அறிவிக்கப்படுவார் என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.