தம்புள்ளை பள்ளிவாசலை இடமாற்றாதீர்கள்
தம்புள்ளை பள்ளிவாயல் புனித பூமிக்குள் இருப்பதால் அதனை அகற்ற வேண்டும் என்ற தம்புள்ள மேயர் தாலிய ஒபதவின் கருத்தை உலமா கட்சி வன்மையாக கண்டித்திருப்பதுடன் பள்ளியை வேண்டுமென்றால் மேயர் உடைக்கலாமே தவிர பள்ளிவாயலை வேறிடத்துக்கு மாற்றுவது மேலும் பல பள்ளிவாயல்கள் புனித பூமி என்ற பெயரில் மாற்றப்பட இடமளித்ததாக முடியும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்திருப்பதாவது,
இந்த நாட்டில் நிலவிய கொடூர யுத்தத்தை வென்று தந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் முதலாவது களங்கமாக தம்புள்ள பள்ளி மீதான தாக்குதலே இருந்தது. இதில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படாமை மிகப்பெரும் களங்கத்தை ஏற்படுத்தியது. அவர்கள் கைது செய்யப்படாமையை கண்டித்து உலமா கட்சி மட்டுமே அப்போது அரச ஆதரவிலிருந்து விலகியது.
எம்மை பொறுத்தவரை தம்புள்ள பள்ளிவாயிலை எக்காரணம் கொண்டும் இடம் மாற்ற கூடாது. மேயர் ஒரு இனவாதியாக இருந்தால் அவர் அப்பள்ளியை உடைக்கட்டும். அப்போது சட்டரீதியாக அதை நாம் அணுகுவோம்.
அவ்வாறு உடைக்கப்பட்டால் தம்புள்ள பள்ளிவாயல் அரச தரப்பால் உடைக்கப்பட்டது என்ற கரை படிந்த வரலாறு எழுதப்படுமே தவிர அதனை இடம் மாற்றினால் மதவாதிகளுக்கு சந்தர்ப்பம் அமைத்து கொடுத்ததாக முடியும். புனித பிரதேசம் என்ற காரணத்துக்காக இடம் மாற்றப்பட்ட தம்புள்ள பள்ளியை உதாரணமாக காட்டி மேலும் பல பிரதேசங்களை தம்மிஷ்டப்படி புனித பிரதேசம் என சொல்லிவிட்டு அங்கிருக்கும் பள்ளியையும் அகற்றச்செய்வார்கள்.
ஆகவே மேயருக்கு தேவையென்றால் பள்ளியை உடைத்துக்காட்டட்டும். அயோத்தி பாபர் மசூதி போல் தம்புள்ள பள்ளியும் தொடர் வழக்கை சந்திக்கும். அவரது அச்சுறுத்தலுக்கு பணிந்து பள்ளியை இடம் மாற்ற தம்புள்ள பள்ளி நிர்வாகம் எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது என உலமா கட்சி வலியுறுத்துகிறது.
Post a Comment