பேஸ்புக் பதிவுக்காக கைதான இளைஞன் - ஒரு வருடத்திற்கு பின்னர் பிணை
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞனுக்கு, ஒரு வருடத்திற்குப் பின்னர், திருகோணமலை மேல் நீதிமன்றத்தினால் இன்று (14) பிணை வழங்கப்பட்டுள்ளது.
மூதூர் - சம்பூர் 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த பாலகிருஸ்ணன் ரதிகரன் என்ற 28 வயது இளைஞனுக்கே ஓராண்டின் பின்னர் பிணை கிடைத்துள்ளது.
குறித்த இளைஞன், மாவீரர் தினத்தை முன்னிட்டு, கவிதை ஒன்றினை தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியமைக்காக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான வழக்கு, திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று (14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, குறித்த இளைஞனை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார் என HIRU செய்தியாளர் தெரிவித்தார்.
Post a Comment