Header Ads



மன்றாட்டம் வேண்டும்..!



இறைமறை இயம்பிய இனியன ஏறவில்லை

   இதயம் இரும்புக் கரையாய்... தேறவில்லை

மறையின் மாண்புதான் மண்ணின் மேவவிலை

   மண்ணின் உயர்ந்தது கொரோனா மாளவிலை

 

ஐம்பெருங் கடமைகள் உயர்வாய்க் காணவிலை

   ஐவேளைத் தொழுகையிலை பழிபவத்திற் கச்சமிலை

வீம்பாம் வார்த்தைகட்கும் புவியினின் குறைவுமிலை

   வந்ததே கொரோனா ஓடியொழிப்பதற்கும் நாதியிலை

 

கொடுப்ப துனைகாக்கும் என்பதும் ஏறவில்லை

   கொடுமிருகங் களன்னதாய் மாறுவது மறியவில்லை

எடுப்பதுங் கெடுப்பதும் தடுப்பதும் பழியறிவில்லை

   எடுப்பாய் வந்தகொரோனா வின்பயம் அழியவில்லை

 

பாவங்கள் நீக்குங்கால் புவியினின் நீங்கும்

   பயந்தோடும் கொரோனா இறையினால் மாளும்

பாவங்கள் நீங்குதற்கு பச்சாதாபம் வேண்டும்

   படைத்தவன் அருளினால் கொரோனா நீங்கும்

 

நெஞ்சறிய செய்திட்ட பாவங்கள் நினைத்து

   நாயனிடம் கரமேந்தி அழுது புகழேத்து

பஞ்சாகத்தான் பறந்துவிடும் மீண்டும் வாராதே

   பயம்நீக்கு கொரோனாவில் படைத்தவனை யணுகு

 

அணுவு மசையாது அல்லாஹ்வின் ஏவலின்றி

   அவனருளின்றி எதுவும் உயராது மேலெழும்பி

கனுக்காலுக் கீழாகும் தீயோரின் உபாயங்கள்

   கதறியழுது மன்றாட இறைவனின் அருளோங்கும்


-'தமிழ்ச்சுடர்' மதுராப்புர, கலைமகன் பைரூஸ்

No comments

Powered by Blogger.