Header Ads



சிறுவர்களை இலக்கு வைக்கும் சைபர் குற்றவாளிகள் - பெற்றோருக்கு எச்சரிக்கை


கொரோனா வைரஸின் இரண்டாம் அலையை இலங்கை எதிர்கொண்டுள்ள நிலையில், இணையவழி கற்கைநெறியை தொடரும் மாணவர்களை இலக்குவைத்து சைபர் தாக்குதல் முன்னெடுக்கப்படுவது தெரியவந்துள்ளதாக, இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் எச்சரித்துள்ளது.

எனவே இது தொடர்பில், பெற்றோரை அவதானத்துடன் இருக்குமாறும் அச்சங்கம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் கூறிய சங்கத்தின் தலைவர் ரஜீவ யசிரு குருவிட்ட, இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், பாடசாலை கல்வி நடவடிக்கைகள், பிரத்தியேக வகுப்புகளை Zoom, WhatsApp, Microsoft Teams  செயலிகள் மூலமாக முன்னெடுக்குமாறு பாடசாலைகளின் ஆசிரியர்கள், தனியார் கல்வி நிலையங்களின் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தச் சூழலில், சிறுவர்களை இலக்கு வைக்கும் இணைய குற்றவாளிகளின் நடவடிக்கைகளை தமது சங்கம் கண்காணித்ததாகவும் தெரிவித்தார். 

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை இணையத்தில் கல்வி கற்பதற்கு அனுமதிக்கின்ற நிலையில், பெரும்பாலும் கல்வியில் ஈடுபடுவது என்ற போர்வையில் சமூக ஊடக தளங்களில் நேரத்தை வீணடிப்பது போன்ற பல்வேறு வலைத்தளங்களை அணுகுவதற்கான வாய்ப்பை சிறுவர்கள் பெற்றுக்கொள்கின்றனர் என்றும் தெரிவித்தார். 

பெற்றோரின் மேற்பார்வையின்றி சிறுவர்கள், இணையத்தைப் பயன்படுத்துகின்றமை, தகவல் தொழில்நுட்ப அறிவு குறைந்தவர்களாக பெற்றோர் இருக்கின்றமை போன்ற காரணங்களால், சிறுவர்கள் சைபர் குற்றவாளிகளுக்கு எளிதில் இரையாகிவிடுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். 

எனவே சிறுவர்கள் இணையவழிக் கற்கையைத் தொடரும்போது பெற்றோர் அவதானத்துடன் இருப்பது அவசியம் என்றும் சிறுவர்கள் எவ்வாறான இணையத்தளங்களைப் பார்வையிடுகின்றனர் என்பது தொடர்பில் கண்காணிக்குமாறும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

No comments

Powered by Blogger.