Header Ads



நாட்டிற்கு சாதகமற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மீளாய்வு செய்ய வேண்டும் – ஜனாதிபதி



கைச்சாத்திடப்பட்டுள்ள பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் நாட்டிற்கு சாதகமற்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.


நாட்டுக்கு நன்மை பயக்கும் அதிக இலாபமீட்டக்கூடிய விதத்தில் ஒப்பந்தங்கள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் மீளுருவாக்கத்தின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.​


ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக தலைமைத்துவத்தை வழங்கியுள்ள ஏற்றுமதி அபிவிருத்தி சபை 28 வருடங்களின் பின்னர் கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


முதலீட்டாளர்களை அடையாளம் கண்டு, நிறுவன மற்றும் தனிநபர் மட்டங்களில் வடிவமைக்கப்பட்ட புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதன்போது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.


நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச முயற்சியாண்மை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் குறித்து கலந்துரையாப்பட்டுள்ளது.


பல்வேறு நிறுவனங்கள் முன்னெடுத்த ஆய்வுகளின் விளைவாக, உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தைகளை வெல்லக்கூடிய பல திட்டங்கள் கைவசமுள்ளதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.


வட்டி வீதங்கள், நிதிப்பிரிவு மற்றும் பங்குச் சந்தை ஆகியவற்றின் ஸ்திரத்தன்மை குறித்து மகிழ்ச்சி வௌியிட்டுள்ள இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுப்பதே தமது நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.


முறையான விளம்பர பிரசாரத்தின் ஊடாக தூதரக அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், முதலீட்டாளர்களை நாட்டிற்கு வரவழைக்கும் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.


சர்வதேச வர்த்தகர்களை மையமாகக் கொண்டு கொழும்பில் அலுவலகமொன்று நிறுவப்படுவதிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


இதனைத்தவிர, சீமெந்து மற்றும் உருக்கு விலையை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.