Header Ads



சஜித் - ஜலனிக்கு பிள்ளைகள் இல்லை, இழிவுபடுத்திய விவகாரம் ஐ.நா. க்கு செல்கிறது

பொதுத்தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பிரதமர் , ஜலனி பிரேமதாஸவின் மகப்பேற்றுச் சுதந்திரத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் அண்மைக்காலமாக சமூகவலைத்தளங்களில் கண்டனங்கள் வெளியிடப்பட்டு வந்தன. 

இந்நிலையில் இதனைக் கண்டிக்கும் விதமாக சர்வதேச ரீதியில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புபவர்களை ஊக்குவிக்கும் 'சேன்ஜ்' என்ற பிரபல சிவில் அமைப்பின் ஊடாக சிவில் சமூக செயற்பாட்டாளரொருவர் ஐக்கிய நாடுகளுக்கு அனுப்பிவைப்பதற்கான மனுவொன்றை வெளியிட்டிருப்பதுடன், அதில் பொதுமக்களைக் கைச்சாத்திடுமாறும் கோரப்பட்டிருக்கிறது.

இந்த மனு 'பெண்களின் மகப்பேற்றுச் சுதந்திரம் என்பது அரசியலுக்கான ஓர் ஆயுதம் அல்ல என்பதைப் பிரதமருக்குச் சொல்லுங்கள்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கிறது. மனுவில் கூறப்பட்டிருக்கும் விடயங்கள் வருமாறு:

மகப்பேற்றுச் சுதந்திரம் என்பது அனைவருடைய வாழ்வினதும் மிகத்தனிப்பட்ட விடயமொன்றாகும். தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் விருப்பங்களுக்கான உரிமை தொடர்ந்தும் வலியுறுத்தப்பட வேண்டியதாகும். 

2019 ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது மனைவி ஜலனி பிரேமதாஸ ஆகியோருக்குப் பிள்ளைகள் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி, பொதுக்கூட்டம் ஒன்றில் அவர்களை விசனப்படுத்தும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்.

பொதுக்கூட்டத்தில் குழுமியிருந்தவர்கள் உற்சாகத்துடன் சிரித்தவாறு இருக்கையில், 'அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லாத காரணத்தினால் செவிலியர்கள் (மிட்வைப்) அவர்களுடைய இல்லத்திற்குச் செல்லமாட்டார்கள்' என்று மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். இது கருவுறமுடியாத அனைத்துப் பெண்களையும் அவமதிக்கும் வகையிலான கருத்தாகும்.

பெண்களுடைய மகப்பேற்றுச் சுதந்திரமும், தெரிவும் ஆணாதிக்கவாதிகளினால் எவ்வாறு கையாளப்படுகின்றது என்பதை விளக்குவதற்கு இது மிகச்சிறந்த உதாரணமாக அமைந்திருக்கிறது. 

அதேவேளை மற்றொரு பக்கம் இது அனைவரையும் முகம் சுளிக்க வைக்கும் விதமான அரசாங்கத் தலைவரின் மோசமான செயற்பாடுமாகும். எனவே இதுவிடயத்தில் ஜலனி பிரேமதாஸவிடம் மஹிந்த ராஜபக்ஷ மன்னிப்புக்கோர வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. UNMAI PESHINAAL VETKAMAA.
    MUSLIM THAAIMAARKALUKKU, ORU
    PILLAI MAATHIRAMTHAAN, PERAVENDUM
    ENDU SHOLKINRA, INAVAATHI
    CHAMPIKA, ITHARKU ENNA PATHIL
    KOORUKIRAAN ENRU PAARPOM.

    ReplyDelete

Powered by Blogger.