Header Ads



83 கலவரத்தின் ​​நான் வெளியே செல்லும்போது 2 புத்தகங்களை எடுத்துச் சென்றேன் - ஆளுநர் ஹனிஃப் யூசுப்


Clean Sri Lanka தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு இணைந்த வகையில் செயல்படுத்தப்படும் 'அருணு தொர' தேசிய வாசிப்பு ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், மேல் மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நடமாடும் நூலக வாகனங்கள் விநியோகிக்கும் ஆரம்ப நிகழ்வு இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.


இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், கெஸ்பேவ மற்றும் சீதாவக்கபுர நகர சபைகள் மற்றும் ஹோமாகம, தொம்பே, அத்தனகல்லை, மினுவங்கொடை, வத்தளை, புலத்சிங்ஹல, வலல்லாவிட்ட மற்றும் பாலிந்தநுவர ஆகிய பிரதேச சபைகளுக்கும் நவீன வசதிகளுடன் கூடிய 10 நடமாடும் நூலக வாகனங்கள் மற்றும் 9300 புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன.


Clean Sri Lanka செயலகத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மேல் மாகாண சபையின் உள்ளூராட்சித் திணைக்களத்தின் ஊடாக இந்தத் திட்டம் செயற்படுத்தப்படுகிறது.


கிராமிய மட்டத்தில் வாசிப்பு ஆர்வத்தை வளர்ப்பதன் மூலம் அறிவார்ந்த  இலங்கையர்களை உருவாக்கும் நோக்கத்துடன் 'அருணு தொர'  தேசிய வாசிப்பு ஊக்குவிப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


2025 ஆம் ஆண்டு முழுவதும் 'அருணு தொர'  தேசிய வாசிப்பு ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிடத்தக்க பணிகள் இதன்போது பாராட்டப்பட்டன.


புதிய சமூகத்தை கட்டியெழுப்புவதில் சரியான சமூக வாசிப்பு அவசியம் என்றும், மக்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த புத்தகங்களுடன் கிராமம் கிராமமாகச் செல்வது ஒரு அழகான அனுபவம் என்று இங்கு சிறப்புரை ஆற்றிய சிரேஷ்ட எழுத்தாளர் மஹிந்த பிரசாத் மஸ்இம்புல குறிப்பிட்டார்.


இலக்கிய வளங்களிலும் இலக்கிய வெளியீடுகளிலும் பற்றாக்குறை இல்லாத நமது நாட்டில், சரியான மற்றும் முறையான வழிமுறையின் கீழ் அவற்றை வாசிப்பு சமூகத்திற்கு எடுத்துச் செல்வதற்காக Clean Sri Lanka ஆரம்பித்துள்ள இந்த வேலைத்திட்டம், எளிய செயல்முறை அல்ல என்றும் மாறாக மிகவும் பெறுமதிமிக்க கலாசார செயல்முறை என்று சுட்டிக்காட்டிய அவர், இதன் மூலம் புத்தகங்களை வாசிக்கும் கலாசாரம் மீண்டும் இந்நாட்டில் உருவாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.


83 கறுப்பு ஜூலையில் அண்டை வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், ​​தான் வெளியே செல்லும்போது இரண்டு புத்தகங்கள் மற்றும் மூன்று சட்டைகளை மாத்திரமே எடுத்துச் சென்றதாகவும், புத்தகங்களை வாசிப்பதன் மூலம் தான் பெற்ற அனுபவம், வாழ்க்கையில் வெற்றிபெற உதவியது என்று இக்கூட்டத்தில் உரையாற்றிய மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசுப் குறிப்பிட்டார்.


Clean Sri Lanka வேலைத்திட்டம் சுற்றாடலை மாத்திரமன்றி மனதையும் தூய்மைப்படுத்தும் ஒரு திட்டம் என்று சுட்டிக்காட்டிய ஆளுநர் ஹனிஃப் யூசுப், எதிர்கால சந்ததியினருக்காக தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.


இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இன்றைய போராட்டம் மிக்க சமூகத்தில் நல்லொழுக்கமுள்ள எதிர்கால சந்ததியினரைக் கட்டியெழுப்பும் செயல்பாட்டில் இத்தகைய திட்டங்கள் மிகவும் முக்கியமானவை என்று குறிப்பிட்டார்.


முன்னேற்றகரமான மற்றும் நல்லொழுக்கமுள்ள சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் சமூகத்தின் நுட்பமான பகுதிகளைத் தொட்டு, சிறியதாக இருந்தாலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களில் Clean Sri Lanka வேலைத்திட்டம் கவனம் செலுத்தியுள்ளது என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதியின் செயலாளர், 'அருணு தொர' தேசிய வாசிப்பு ஊக்குவிப்பு திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்று, அதனை தேசிய அளவிலான வேலைத்திட்டமாக மாற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.


இந்த நடமாடும் நூலக சேவை மூலம், பாடசாலை மாணவர்கள் மற்றும் வாசிப்பில் ஆர்வமுள்ள கிராமப்புற மக்களுக்கு மிகவும் செயற்திறனான மற்றும் நவீன நூலக அனுபவம் கிடைக்கும்.  மேலும், 'அருணு தொர' தேசிய வாசிப்பு ஊக்குவிப்புத் திட்டத்தின் ஊடாக எதிர்காலத்தில் இதுபோன்ற திட்டங்கள் நாடு முழுவதும் மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் வலியுறுத்தப்பட்டது.


Clean Sri Lanka ஒருங்கிணைப்பாளர் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் (நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள்) ஜி.எம்.ஆர்.டி. அபோன்சுவும் இங்கு கருத்துத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.