Header Ads



கடத்தல் நாடகமாடிய விமானப்படை வீரர் கைது


-கனகராசா சரவணன்-

விடுமுறைக்கு வீடு சென்று திரும்பிய விமானப்படைவீரர் ஒருவர், தன்னை தானே கடத்தி காட்டுப்பகுதியில்  கைகள், கால்கள் மற்றும் வாயை கட்டிக்கொண்டு நாடகமாடியுள்ள சம்பவம் இன்று (28) வியாழக்கிழமை   இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

 ரிதிதென்னை பொலிஸ் சோதனைச் சாவடியில் இருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில் செங்கல்வாடி ஒன்றுக்கு அருகில், உள்ளாடையுடன் ஆண்ணொருவர், மரத்தில் கட்டப்பட்டிருந்ததை, சோதனைச் சாவடியில்,  கடமையிலிருந்த பொலிஸார் கண்டுள்ளனர்.

“மரத்தில் முரட்டு அரசியலுக்காக உதவும் கைக்கூலிகள் இப்படித்தான் கொல்லப்படுகின்றார்கள்” என எழுதப்பட்ட வாசகம் அடங்கிய பதாகையையும் கண்டுள்ளனர். அதனையடுத்து, அவரை மீட்டு உடனடியாக  வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்

அதன்பின்னர், விமானப்படை வீரரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். அதில், மட்டக்களப்பு விமானப்படை படை முகாமில் கடமையாற்றும் வலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய ரத்தினசூரிய முதியன்சலாவே  என்பவர் என தெரியவந்தது.

அவர், விடுமுறைக்காக வீடுச்சென்று, நேற்று (28)   மஹியங்கனையை வந்தடைந்துள்ளார்.  அங்கிருந்து பொலன்னறுவை பஸ்வண்டியில் பிரயாணித்து செவினப்பிட்டி மட்டக்களப்பு சந்தியை மாலை வந்தடைந்துள்ளார்.

அங்கிருந்து மட்டக்களப்பு செல்வதற்காக   காத்திருந்தபோது மனைவியுடன் கையடக்க தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தேன். எனினும்,  பின்னால் தனியார் வாகனம் ஒன்றில் வந்த இனந்தெரியாதோரால்  தனது தலையில் தாக்கி, தன்னுடைய முகத்தை மூடிவிட்டனர் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

வாகனத்தில் ஏற்றப்பட்டு, சுமார் 2 மணித்தியால பிரயாணத்தின் பின்னர் இவ்விடத்தில் கொண்டுவந்து, ஆடைகளை களைந்து, கட்டிவைத்துவிட்டு, அந்த பதாகையையும் வைத்துவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர் என அவர் வாக்குமூலமளித்துள்ளார்.

எனினும், அந்த விமானப்படை வீரரின் உடலில் எவ்விதமான அடிகாயங்களும் இல்லாததை தெரிந்துகொண்டு பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

 விசாரணையில் அவர் கையடக்க தொலைபேசியில் விளையாட்டு ஒன்றில் அதிக பணத்தை இழந்துள்ளதாகவும் முகாமில் சக படைவீரர்களிடம் கடனாக பணம் வாங்கி அதனையும் அந்த விளையாட்டில் இழந்ததையடுத்து கடனாளியாகியுள்ளார்.    

எனினும், கடன்காரரிடமிருந்து தப்பிக்கவே இவ்வாறு நாடகமாடினேன் என, அவர் பொலிஸாரிடம் ஒத்துக்கொண்டார். அதன்பின்னர் அவர் கைது செய்யப்பட்டார் எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை ​மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.  

2

இனந்தெரியாத குழுவினரால் வான்படை சிப்பாய் ஒருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் இலங்கை விமானப்படை தெளிவுபடுத்தியுள்ளது.

மட்டக்களப்பு வான்படை தளத்தில் கடமையாற்றும் கோப்ரல் ஒருவர் நேற்று (28) காலை வாழைச்சேனை, ரிதிதென்ன பிரதேசத்தில் மரத்தில் கட்டப்பட்டு காணப்பட்ட நிலையில், பிரதேசவாசிகள் வாழைச்சேனை காபொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இது தொடர்பில், வான்படை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அந்த இடத்தில் தமிழில் எழுதப்பட்ட பலகை ஒன்றும் காணப்பட்டதாகவும், முரட்டு அரசியலுக்கு உதவும் கைக்கூலிகள் இப்படித்தான் கொல்லப்படுகிறார் என்ற வசனம் எழுதப்பட்ட அட்டையொன்றும் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் தாக்குதலுக்கு இலக்கான வான்படை சிப்பாயிடம் விசாரித்துள்ளனர். அதில், விடுமுறைக்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த தன்னை வேனில் கடத்திச் சென்று சிலர் மரத்தில் கட்டி வைத்து அடித்துக் கொல்ல முற்பட்டதாக தெரிவித்துள்ளார். எனினும், அவர் தெரிவித்த தகவலிலும், விசாரணையில் வெளியான தகவல்களிலும் உள்ள முரண்பாடுகளாலும், அவருக்கு அடுத்ததாக தமிழில் எழுதப்பட்டு காணப்பட்ட அட்டை குறித்தும் பொலிஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரிகள், முழுமையான தமிழ்மொழியறிவு இல்லாத ஒருவரால் இந்த வாசகம் எழுதப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். மேலும் விசாரணையை தொடர்ந்த போது, இந்த செயலை குறித்த வான்படை சிப்பாயே செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்த வான்படை கோப்ரல் கணினி இணைய விளையாட்டுகளுக்கு அதிகளவில் அடிமையாகி இருப்பதாகவும், அதில் ஈடுபடுவதற்காக தனது தளத்தில் உள்ள சக வான்படை வீரர்களிடம் பணம் பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. பணத்தை திருப்பித் தரமுடியாமல் போனதால் தனது உயிரை மாய்த்துக்கொள்ள எண்ணியதாக அவர் அளித்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தான் உயிரை மாய்த்துக் கொண்டால், தனது இறப்பின் பின்னர் தன் மனைவிக்கு கிடைக்க வேண்டிய கொடுப்பனவு கிடைக்காமல் போய்விடும் என்பதற்காகவே இந்த செயலை திட்டமிட்டதாக தெரிவித்துள்ளார்.

தற்போது வாழைச்சேனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட கோப்ரல் இன்று (29) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இந்த நடவடிக்கையுடன் இலங்கை வான்படை அல்லது வேறு எந்த தரப்பினருக்கும் எந்த தொடர்பும் இல்லை, இந்த முழு செயல்முறையும் இந்த கோப்ரல் தனது விருப்பத்திற்கு ஏற்ப மேற்கொண்டதாக வான்படை வலியுறுத்தியுள்ளது.

இலங்கை வான்படையின் நற்பெயருக்கு ஏற்படுத்திய களங்கத்துக்கான, பொலிஸ் விசாரணையின் முடிவில், விமானப்படை சட்டத்தின்படி குறித்த கோப்ரலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் வான்படை மேலும் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.