சபாநாயகர் வரவில்லை, 5 நிமிடங்கள் மாத்திரமே நடந்த பாராளுமன்றம், வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைப்பு
நாடாளுமன்ற நடவடிக்கைகள், இன்றைய -19- தினம் பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமான நிலையில், 5 நிமிடங்கள் மாத்திரமே நீடித்தது.
பிரதிச் சபாநாயகர் ஆனந்த குமாரசிறியினால் ஆரம்பிக்கப்பட்ட சபை அமர்வின் போது, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் பெரும்பான்மை, அரசாங்கத்துக்குத் தேவையென, சபை முதல்வர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.
இதன்போது குறுக்கிட்ட, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, தினேஸ் குணவர்தனவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாதவர்களால், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முடியாதெனக் கூறினார்.
நாடாளுமன்ற அமர்வு, எதிர்வரும் வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கிணங்க, சபை நடவடிக்கைகளை ஒத்திவைப்பதாக, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி அறிவித்தார்.

Post a Comment