Header Ads



எக்னலியகொடவின் கடத்தலுடன் கருணா, பிள்ளையான், மகிந்த ஆகிய மூவருக்கும் தொடர்பு


காணாமல் ஆக்கப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரகித் எக்னலியகொடவின் கடத்தலுடன் கருணா, பிள்ளையான் மகிந்த ராஜபக்ச ஆகிய மூவருக்கும் தொடர்பு இருப்பதாக பிரகித் எக்னலியகொடவின் மனைவி சந்தியா எக்னலியகொட தெரிவித்துள்ளார்.


சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் மட்டக்களப்பில் 'நியாயப்பயணம்' என்னும் தொனிப்பொருளில் நடைப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இன்றைய தினம் (16.04.2023) 340ஆவது நாளை எட்டியுள்ளது.


இது குறித்து மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


மேலும், கருணா, பிள்ளையான் ராஜபக்ச இவர்கள் தனித்தனியானவர்கள் அல்ல எனவும் இவர்கள் இணைந்து ஒரு குழுவாகவே செயற்படுவதாகச் சந்தியா எக்னலியகொட கூறியுள்ளார்.


மகிந்த ராஜபக்ச, அவருடைய அரசியலை நிலை நிறுத்துவதற்காக இந்த மண்ணில் கருணாவையும் பிள்ளையானையும் பாவித்துள்ளதாகவும் மட்டக்களப்பில் இடம்பெற்ற அனைத்து விதமான கொலை, கொள்ளை கடத்தல்களுக்கு இவர்களே மூல காரணமாக இருந்ததாகச் சந்தியா எக்னலியகொட மேலும் தெரிவித்துள்ளார்.


தனது கணவர் கடத்தப்பட்டதில் இவர்களுடைய தொடர்பு இருப்பதாகவும் இன்று தன்னைப் போன்று பல காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டங்களை நடத்தி வருவதாகவும் அவர்கள் தொடர்ந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தனது கணவரின் சுவாசக் காற்று இறுதியாகப் பிரிந்தது மட்டக்களப்பு மண்ணில் என தான் அறிந்துள்ளதாகவும் சந்தியா எக்னலியகொட மேலும் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மகிந்த ராஜபக்சவை பாதுகாப்பதற்கே புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை கொண்டுவந்துள்ளதாகக் காணாமல் ஆக்கப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரகித் எக்னலியகொடவின் மனைவி சந்தியா எக்னலியகொட மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.