Header Ads



அமெரிக்காவை அம்பலப்படுத்திய 21 வயது இளைஞர், கசிந்த ஆவணங்களில் இருந்த 5 முக்கியத் தகவல்கள்


ரகசிய ஆவணங்களை வெளியிட்டு அமெரிக்காவுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியவர் இந்த 21 வயது இளைஞரா?


இந்த ஆண்டு மார்ச் மாதத்தின் துவக்கத்திலிருந்து இணையத்தில் அமெரிக்க ராணுவத்தின் அதிரகசிய ஆவணங்கள் கசிந்து பெரும் சர்ச்சைகளை உருவாக்கி வந்தன.


யுக்ரேன் போரைப்பற்றிய அமெரிக்காவின் அவதானிப்புகள், அமெரிக்காவின் நட்பு நாடுகள் குறித்த முக்கியமான ரகசியங்கள் இவ்வாவணங்களில் காணப்பட்டன.


இப்போது, அந்த ஆவணங்கள் கசிந்தது தொடர்பாக அமெரிக்க விமானப்படையின் தேசிய காவல்படையைச் சேர்ந்த 21 வயதேயான வீரர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.


ஜாக் டெய்க்ஸேய்ரா என்று அடையாளம் காணப்பட்டிருக்கும் அவரை, மாசாச்சுசெட்ஸில் அவரது வீட்டிலிருந்து FBI அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.


அமெரிக்க அட்டர்னி ஜெனெரல் மெர்ரிக் கார்லண்ட், இச்சந்தேக நபர் பெரும் சிக்கல்களின்றி கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார். விசாரணை குறித்தோ, ரகசியங்கள் பகிரப்பட்டதன் நோக்கம் குறித்தோ அவர் வேறெந்த தகவல்களையும் தெரிவிக்கவில்லை.


யார் இந்த இளைஞர்?

ஒரு டீ-ஷர்ட்டும் அரைக்கால் சட்டையும் அணிந்து, கைகளை உயர்த்தியபடி பின்னோக்கி நடந்து, துப்பாக்கியேந்திய அதிகாரிகளிடம் டெய்க்ஸேய்ரா சரணடையும் காட்சிகள் வெளியிடப்பட்டன.


அமரிக்க அரசையும் அதன் ராஜாங்க உறவுகளையும் சங்டகப்படுத்தியதாகக் கருதப்படும் இந்த இளைஞர் மாசாச்சுசெட்ஸில் அமெரிக்க விமானப்படையின் தேசிய காவல் படையின் புலனாய்வுப் பிரிவில் தகவல் தொழில்நுட்ப நிபுணராக 2019ஆம் ஆண்டிலிருந்து பணிபுரிந்து வந்திருக்கிறார். இவ்வலுவலகம் செல்ஃபோன் உபயோகம் தடைசெய்யப்பட்ட ஒரு இடம்.


இவர் ‘Cyber Transport Systems journeyman’ என்ற இளையவர்களுக்கான ஒரு பணியில் அமர்த்தப்பட்டிருந்தார். அமெரிக்க விமானப்படையின் இணையதளம், இப்பணியிலிருப்பவர்கள் அமெரிக்க விமானப்படையின் உலகளாவிய தகவல் தொலைதொடர்பு இளைப்புகளை செயல்படுத்துவர் என்று கூறுகிறது.


அவரோடு பள்ளியில் படித்ததாகக் கூறிக்கொள்ளும் 22 வயதான எட்டி சூஸா, டெய்க்ஸேய்ரா தனது நண்பர் இச்சம்பவத்தில் சந்தேக நபராக அறிவிக்கப்பட்டிருப்பது தனக்கு ஆச்சரியமாக இருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.


“அவன் ஒரு நல்ல பையன். வம்புகளுக்குப் போகாத, அமைதியான பையன். இது ஒரு சிறுவனின் முட்டாள்தனமான தவறாகத்தான் எனக்குப் படுகிறது,” என்றர் சூஸா.


முதலில் இந்த ஆவணங்கள் ஆன்லைன் கேம் விளையாடுபவர்கள் உரையாடப் பயன்படுத்தும் டிஸ்கார்ட் (Discord) என்ற சமூக ஊடகச் செயலியில் பதிவிடப்பட்டன.


இந்த சமூக ஊடகச் செயலியில் ஒரு குழுவிற்கு டெய்க்ஸேய்ரா தாலைவராக இருந்தார் என்று அறிக்கைகள் கூறுகின்றன. இக்குழுவில் ரஷ்யா, யுக்ரேன் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த இளம் ஆண்களே அதிகம் இருந்திருக்கின்றனர். இவர்கள், மீம்கள், மரியாதைக்குறைவான நகைச்சுவை துணுக்குகள், வெட்டி அரட்டைகள் போன்றவற்றையே இக்குழுவில் பெரிதும் பகிர்ந்துகொள்வர் என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தெரிவித்திருக்கிறது.


இச்செயலியில் TheExcaliburEffect, jackdjdtex and TexKilledYou, போன்ற பல பெயர்களில் இவர் உலாவி வந்திருக்கிறார்.


அக்குழுவின் ஒரு உறுப்பினர், டெய்க்ஸேய்ரா தான் அக்குழுவிலிருந்தவர்களிலேயே வயதில் மூத்தவரென்றும், அவர் குழுவிலிருந்த மற்றவர்களிடம் தனது செல்வக்கைப் பதியவைக்க முயன்றார் என்றும் தெரிவித்திருக்கிறார்.


மற்றொரு உறுப்பினர், டெய்க்ஸேய்ரா மறவர்களை எளிதில் கவரும் வகையில் நடந்துகொள்ளக் கூடியவரென்றும், துப்பாக்கிகளின் மீது பெரும் ஆர்வமுடையவரென்றும் கூறினார்.


முதலில், டிஸ்கார்ட் சமூக ஊடகத்தளத்தில் 50 முதல் 100 ரகசிய ஆவணங்கள் கசிந்தன.


ரகசிய ஆவணங்கள் முதலில் டிஸ்கார்ட் ஊடகத்தளத்தில் கசிந்திருந்தாலும், அவை அதற்கு வெளியே பகிரப்பட்டதும்தான் அமெரிக்காவின் பென்டகன் அதிகாரிகளுக்கு அது தெரியவந்து உடனே குற்றவாளிக்கான தேடுதல் வேட்டையைத் துவங்கினர்.


இச்சம்பவத்திற்குப் பிறகு பென்டகன் ரகசியத் தகவல்கள் பரிமாறப்படும் செயல்முறையைத் தாம் மறுபரிசீலனை செய்யவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. ஆனால், இளம் பணியாளர்களிடம் பெரும் பொறுப்புகளை ஒப்படைப்பது அமெரிக்க ராணுவத்தின் இயல்பு என்று ஒரு செய்தித்தொடர்பாளர் கூறினார்.


கசிந்த ஆவணங்களில் இருந்த 5 முக்கியத் தகவல்கள்

1) ஐ.நா சபையின் பொதுச்செயலளர் அன்டோனியோ குட்டரெஸ் ரஷ்ய-யுக்ரேன் போரில் ரஷ்யாவின் நலன்களைப் பாதுகாக்க முனைப்பு காட்டியதாக கருதிய அமெரிக்கா அணுக்கமாகக் கண்காணித்து வந்தது.


2) சீன தொலைதொடர்பு நிறுவனமான Huaweiயின் 5G திட்டத்தைத் தடுத்து நிறுத்துவதைப் பற்றி ஜோர்டன் நாட்டு அதிகாரிகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது.


3) யுக்ரேன் போரின் பலி எண்ணிக்கையை வெளியிடுவதில் ரஷ்ய தேசிய புலனாய்வவு நிறுவனமான FSBக்கும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் இடையே சிக்கல்கள் இருந்துள்ளன. இது ரஷ்ய ராணுவத்திலும், புலனாய்வு நிறுவனத்திலும் அமெரிக்கா எந்த அளவு ஊடுருவியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.


4) பிரிட்டன், லாட்வியா, ஃப்ரான்ஸ், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் சிறப்புப் படைகள் யுக்ரேனில் செயல்பட்டு வந்தன. இது யுக்ரேனில் Natoவின் ஈடுபாடு இருந்ததாகக் கூறிவந்த ரஷ்யாவின் நிலைப்பாட்டை உறுதிசெய்வதாக அமையும்.


5) சீனா ஃபிப்ரவரியில் சோதனை முயற்சியாகத் தனது ஹைப்பர்சோனிக் ஏவுகளையைச் சோதித்தது. BBC

No comments

Powered by Blogger.