Header Ads



வான்வெளி பயணம் தடுப்பு - கடல்வழியாக வெளியேற கோட்டாபய, பசில் முயற்சியா..??


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வானுார்தி தளத்தின் ஊடாக, நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போதிலும், இலங்கையின் குடிவரவு பணியாளர்கள் அதனை தடுத்ததாக உத்தியோகபூர்வ தரப்புக்களை மேற்கோள்காட்டி ஏ.எஃப்.பி செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது மனைவியும் சர்வதேச விமான நிலையத்திற்கு அடுத்துள்ள இராணுவ தளத்தில் நேற்றைய இரவைக் கழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை புதன்கிழமை பதவி விலகுவதாகவும், அமைதியான அதிகார மாற்றத்திற்கான வழியை தெளிவுபடுத்துவதாகவும் ஏற்கனவே அவர் உறுதியளித்துள்ளார்.

எனினும், தப்பிச்செல்லும் போது தமது சொந்த நாட்டிலேயே சிக்கியுள்ளதாக ஏ.எஃப்.பி குறிப்பிட்டுள்ளது.

73 வயதான ஜனாதிபதி கோட்டாபய, கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக, தாம் பதவி விலகுவதற்கு முன் வெளிநாடு செல்ல விரும்பியதாக நம்பப்படுகிறது.

எனினும் குடிவரவு அதிகாரிகள் அவரது கடவுச்சீட்டை முத்திரையிட மறுத்துவிட்டனர்.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவும் இன்று (12) அதிகாலை குடிவரவு அதிகாரிகளால் தடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் திரும்பிச்சென்றுள்ளார். 

இதனையடுத்து மத்தள மஹிந்த ராஜபக்ஷ வானுார்தி நிலைய குடிவரவு அதிகாரிகளும் தமது கடமைகளில் இருந்து விலகியுள்ளனர்.

இதேவேளை கோட்டாபய மற்றும் பெசில் ஆகியோருக்கு விமான நிலையங்களின் ஊடாக தப்பிச்செல்லமுடியாத நிலையில், கடற்படைக் கப்பல் மூலம் இந்தியா அல்லது மாலைத்தீவுக்கு செல்வதே தற்போதுள்ள வழியாகும் என்று பாதுகாப்பு தரப்பை கோடிட்டு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.