Header Ads



12 கோடி ரூபா லஞ்சம்: விஜயதாச மாட்டிக் கொள்ளும் நிலைமை


பாதாள உலகக்கும்பல் தலைவரான ஹரக் கட்டா என்றழைக்கப்படும் நந்துன் சிந்தகவின் மனைவியிடம் 12 கோடி ரூபா லஞ்சம் பெற்றுக் கொண்ட சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் நிலைமை இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 


தற்போதைக்கு கிடைத்துள்ள தகவல்களின் பிரகாரம், ஹரக் கட்டாவின் மனைவி மதுஷிகா மதுவந்தியிடம் இருந்து குறித்த பெரும்தொகைப் பணம் வங்கிக் கணக்கிற்கோ, இலங்கை ரூபா நாணயத்திலோ பெறப்படவில்லை.


அதற்கு மாறாக மதுவந்தி வசிக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் நாணயமான திர்ஹம்களில் குறித்த பெரும் தொகைப் பணம் அவரிடமிருந்து பெறப்பட்டுள்ளது.


துபாயில் வசிக்கும் நிர்மல பண்டாரா என்ற 'ஹெர்பி' என்பவர் மூலம் இந்தப் பரிவர்த்தனை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களான சட்டத்தரணி ரகித ராஜபக்ச, சரித் அபேசிங்க, வருண ஹென்த்றிகே ஆகியோர் கடந்த 2023 மார்ச் 23ஆம் திகதியன்று துபாய்க்குச் சென்றுள்ளனர்.


அங்கு ஹெர்பியின் வீட்டில், 'ஹரக் கட்டா' வின் மனைவியான மதுஷிகா மதுவந்தி மற்றும் தற்போதைக்கு தடுப்புக் காவலில் உள்ள மிதிகம ருவன் ஆகியோரை அவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.


அதன்போது,  சந்தேகநபர்கள் ஆரம்பத்தில் 500 மில்லியன் ரூபா தொகையை லஞ்சமாகக் கோரியுள்ளனர்.


அது பின்னர் பேச்சுவார்த்தைகள் மூலம் 300 மில்லியன் ரூபாவாகவும், இறுதியாக 200 மில்லியன் ரூபாவாகவும் குறைக்கப்பட்டது.


அந்தத் தொகையில், 12 கோடி ரூபாய் முன்பணமாகக் கோரப்பட்டது. அதன்படி, இந்தத் தொகை முதல்நாள் 10 கோடி ரூபாயாகவும், மறுநாள் 2 கோடி ரூபாயாகவும் திர்ஹம்களில் வழங்கப்பட்டது என விசாரணையில் தெரியவந்துள்ளது.


இந்த லஞ்சத்தைப் பெறுவதன் முக்கிய நோக்கம், பொலிசாரின் தடுப்புக் காவலில் இருந்த ஹரக் கட்டா கொல்லப்படுவதைத் தடுப்பதும், அவர் மீது விதிக்கப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவுகளை நீக்குவதும், அவரை பூசா உயர் பாதுகாப்புச் சிறையிலிருந்து மற்றொரு சிறைக்கு மாற்றுவதும், விசாரணையிலிருந்து அவரை விடுவிக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதும் ஆகும்.


மூன்றாவது சந்தேக நபரான அருணா வருண ஹெண்ட்ரிகே துபாயில் பெறப்பட்ட 12 கோடி ரூபாயை நாட்டிற்குக் கொண்டுவர 'உண்டியல்' முறையைப் பயன்படுத்தியதாக லஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


மூன்று சந்தேக நபர்களும் 2023 மார்ச் 29 திகதியன்று ஒரே விமானத்தில் இலங்கை திரும்பியுள்ளனர்.


அதன்போது முன்னாள் நீதி அமைச்சரும், ரகித ராஜபக்சவின் தந்தையுமான விஜயதாச ராஜபக்சவும் இந்தப் பயணத்தில் கலந்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளதால், இவ்விஷயம் குறித்து மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடிகளைத் தடுப்பதற்கான விசாரணை ஆணைக்குழுவின் உதவி பணிப்பாளர் நாயகம் அனுஷா சம்பந்தப்பெரும தெரிவித்துள்ளார்.  

No comments

Powered by Blogger.