Header Ads



அமைச்சர்களை பராமரிக்க பணத்தை செலவிடும் அரசாங்கம், தேர்தலை நடத்துவதற்கு பணமில்லை என்பது நகைப்புக்குரியது


தேர்தலை ஒத்திவைக்கும் வகையில் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் இருவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக பொலிஸ் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகவும், நடைமுறையிலுள்ள சட்டத்தின் பிரகாரமே தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாகவும்,தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் அது எதிர்காலத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு இடையூறாக அமையும் எனவும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


இது மக்களின் தேர்தல் உரிமையை மீறுவதாகவும்,அவர்களுக்கு மக்களிடமுள்ள குறைந்த விருப்பை தவிர்க்கவும் பல்வேறு தந்திரங்கள் கையாளப்படுவதாகவும், இந்நேரத்தில் எதிர்ப்புத் தெரிவிக்காவிட்டால் ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் கூட ஒத்திவைக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் எல்லை நிர்ணய ஆணைக்குழுவைக் கொண்டு வருதல், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானம் தவறானது எனவும் பல்வேறு கருத்துக்கள் நிலவுவதாகவும் கூறுவது,ஒரு கட்சியின் தலைவராகவும்,உறுப்பினராகவும் இருந்து கொண்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை அழைத்து ஆவணங்களை பரிசீலிப்பது போன்ற சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் செயல்முறையை பாதிக்கும் விடயங்கள்,தேர்தலுக்கு பணமில்லை எனக் கூறுவது,பணத்தை அச்சடிக்க முடியாது என்ற நிபந்தனை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதான நடவடிக்கைகள் இதையே புலப்படுத்துவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.


தேர்தலை நடத்துவதற்கு பணமில்லை என கூறிக்கொண்டே இரண்டு அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டதாகவும்,அமைச்சர்களை பராமரிக்க பெரும் தொகையை செலவு செய்யும் அரசாங்கத்திடம் தேர்தலை நடத்துவதற்கு பணமில்லை என கூறுவது நகைப்புக்குரியது எனவும் எதிர்கட்சி தலைவர் மேலும் குறிப்பிட்டார்.


தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்துக்கு எதிர்கட்சிக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனவும்,அதில் பல குறைபாடுகள் இருந்தாலும் கொள்கையளவில் இது ஒரு நல்ல விடயமாக கருதுவதாகவும், ஆனாலும் இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டதன் நோக்கம் குறித்து பல சிக்கல்கள் நிலவுவதாகவும்,இந்த சட்டமூலத்தை பயன்படுத்தி தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.


தேர்தலை ஒத்திவைப்பதற்காகவே நேற்று ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வந்ததாகவும், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு இது பொருந்தாது என ஷரத்து சேர்க்கப்பட்டால் இச்சிக்கல் அவசியமில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் மீதான விவாதம் இன்றைய(19) விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.