2 குழந்தைகளினதும் ஜனாசாக்கள், எப்போது கையளிக்கப்படும்..?
மட்டக்களப்பு - மாவடிச்சேனை பகுதியில் தனது இரு பிள்ளைகளை கிணற்றினுள் வீசி கொலை செய்த தந்தையை பதினான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவடிச்சேனை பாடசாலை வீதியில் வசிக்கும் அஸிமுல் ஹக் (வயது 10), அஸிமுல் தாஹியா (வயது 7) ஆகிய இரு பிள்ளைகளும் வீட்டு கிணற்றில் தூக்கி வீசப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பிள்ளைகளின் தந்தை முகம்மது லெப்பை சுலைமா லெப்பை (வயது 46) கைது செய்யப்பட்டிருந்த நிலையில் வாழைச்சேனை பொலிஸாரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போதே சந்தேகநபரை பதினான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.முஹமட் பஸீல் உத்தரவிட்டுள்ளார்.
அத்தோடு சடலங்கள் நேற்று வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.முஹமட் பஸீலின் உத்தரவிற்கமைய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரிக்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகார விசேட விடுமுறையில் உள்ள நிலையில் எதிர்வரும் 18ஆம் திகதி சடலம் உறவினர்களிடம் வழங்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment