நல்லாட்சி அரசாங்கத்தில் சிலர், மஹிந்தவுடன் டீல் - சம்பிக்க
நல்லாட்சி அரசாங்கத்தில் சில நபர்கள் மஹிந்த ராஜபக் ஷவுடன் இரகசிய ஒப்பந்தங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களின் டீலை உடனடியாக நாம் நிறுத்துவோம் என பாரிய நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக் ஷவினால் முன்னெடுக்கப்பட்ட பாரிய நிதி மோசடிகள் காரணமாக அவரது பிரஜாவுரிமையை பறிப்பதற்கு கலந்தாலோசித்து வருவதாக வும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
கடந்த காலங்களில் மிகவும் மோசமான வகையில் இருந்த ஊழல் வாத அரசியல் செயற்பாடுகள் இன்று நாட்டில் இல்லை. எமது நாடு இன்று மிகவும் நேர்மையான, தூய்மையான பயணம் ஒன்றை முன்னெடுத்து செல்கின்றது. இதில் மனித உரிமைகள், ஜனநாயகம், சுதந்திரம் என அனைத்தும் பாதுகாக்கப்படுவதுடன் எமது மக்கள் இந்த நாட்டில் சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை நாம் உருவாக்கியுள்ளோம்.
இன்று நாம் தேர்தல் ஒன்றுக்கு முகங்கொடுத்து வருகின்றோம். இதுவும் மிகவும் ஜனநாயக ரீதியிலான தேர் தல் என்பதை மறந்துவிடக்கூடாது. முன்னைய ஆட்சியிலும் 11 ஆண்டுகள் நான் அமைச்சராக இருந்துள்ளேன்.மஹிந்த ராஜபக் ஷ எவ்வாறு தேர்தலை நடத்துவார் என எனக்கு நன்றாகவே தெரியும். தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்னரே திறைசேரியில் உள்ள நிதியை தன்வசப்படுத்தி பஸில், கோத்தபாய ராஜபக் ஷக்களின் மூலமாக பிரித்து தமது அரசியலை கையாள்வார்கள்.
அரச அதிகாரிகளின் மூலமாக தமது பிரசார செயற்பாடுகள் அனைத்தையும் முன்னெடுப்பார்கள். எனினும் இன்று அவ்வாறு ஒன்றும் செய்ய முடியாது. தேர்தல் சட்டங்களை மீறும் எந்தவொரு செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியாது.
கடந்த கால ஊழல் குறித்த அறிக்கைகள் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதில் மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்தின் 27 முக்கிய ஊழல் குற்றங்கள் பதிவாகியுள்ளன. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மூலமாக இவற்றை கண்டறிந்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதில் அரச ஊடகம் ஒன்றில் நிதி வழங்கப்படாது தமக்கான அரசியல் பிரசார செயற்பாடுகளை முன்னெடுத்த மிகப்பெரிய ஊழல் குற்றத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பிரஜாவுரிமை பறிக்கப்பட வேண்டும் என்பதே முன்வைக்கப்பட்டுள்ள யோசனையாகும். மிகப்பெரிய ஊழல் வாதிகளுக்கு நாட்டில் இடம் இல்லை. அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அதனையே நாம் அரசாங்கத்தில் இருந்துகொண்டு தெரிவித்து வருகின்றோம்.
மேலும் இந்த அரசாங்கத்தில் உள்ள சிலர் மஹிந்த ராஜபக் ஷவுடன் இரகசிய ஒப்பந்தங்களை செய்ய முயற்சித்து வருகின்றனர். மஹிந்த ராஜபக் ஷவிற்கும் அரசாங்கத்தில் சிலருக்கும் டீல் உள்ளமை எமக்கு தெரிய வந்துள்ளது. இதனையும் நாம் உடனடியாக நிறுத்துவோம். இவர்களுக்கு எதிராக உடனடியாக நாம் நடவடிக்கை எடுப்போம். அதேபோல் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைக்கு அமைய குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரிய ஊழல் மோசடி குற்றவாளிகளை உடனடியாக தண்டிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Post a Comment