மதுரங்குளி பஸ் விபத்தில், மரணித்தோரின் விபரங்கள்
புத்தளம் மதுரங்குளிப் பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்த ஏழு பேரினதும் பெயர் விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இவர்களுள் ஒருவர் இந்தியப் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரங்கள் பின்வருமாறு: கத்தளாய், தம்பலகாமம், சிராஜ் நகரைச் சேர்ந்த சஹீர் முஹம்மட் உஸாமா ( வயது 23), தங்கொடுவ கட்டுநேரிய தெற்கு பகுதியைச் சேர்ந்த திஸாநாயக்க என்டன் திலீப் தர்ஷன (வயது 33), ஹம்பாந்தோட்டை, சுனாமி வீடமைப்புத் திட்டத்தில் வசிக்கும் முஹம்மட் இஸ்மாயில் பாத்திமா சஜீதா (வயது 19), ரக்குவான, பட்டலந்தயைச் சேர்ந்த முஹம்மட் ஹனீபா முஹம்மட் இம்ரான்கான் (வயது 23), வெல்லம்பிட்டி, கனத்தை வீதியைச் சேர்ந்த சமரசிங்க ஆராச்சிலாகே ரஞ்சனி மெராயா (வயது 64), வெல்லம்பிட்டி, கனத்தை வீதியைச் சேர்ந்த பெதும் பிரதீபா நாராயன், இந்தியா சுபானி நகரைச் சேர்ந்த ஆறுமுகம் பாண்டி ஆகியோரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இவ் விபத்தில் படுகாயமடைந்த இந்திய பிரஜையான ஆறுமுகம் பாண்டி என அடையாளம் காணப்பட்டுள்ள நபர் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்திய பிரஜையின் சடலம் தொடர்பில் இந்திய தூதரகத்திற்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த சடலம் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ.சந்திரசேன தெரிவித்தார்.
குறித்த இந்திய பிரஜை புடவை வியாபார நோக்கத்திற்காக இலங்கை வந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ.சந்திரசேன கூறினார்.
அத்துடன், குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களில் இரண்டு பேரின் சடலங்கள் திங்கட்கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்களது சடலங்கள் இன்று (நேற்று) உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
திங்கட்கிழமை அதிகாலை கொழும்பிலிருந்து புத்தளம் மார்க்கம் ஊடாக யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் பஸ், பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது வேகக் கட்டுப்பாட்டை இழந்த குறித்த பஸ், வீதியை விட்டு விலகி வீதியோரத்தில் உள்ள பாலத்தை உடைத்துக்கொண்டு கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த விபத்தில் இந்திய பிரஜை உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன், 49 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 42 பேர் புத்தளம், முந்தல், சிலாபம் மற்றும் கொழும்பு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Post a Comment