Header Ads



ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான, தரக்குறைவான மருந்துகள் இறக்குமதி

ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான தரக்குறைவான மருந்துகள் கடந்த ஐந்து வருடங்களில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக நிறுவனங்கள் தொடர்பான ஆய்வுக்குழுவான “கோப்”  தெரிவித்துள்ளது. அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனம் தற்போது கோப் குழுவின் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதனடிப்படையில் இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்திணைக்களத்தை வந்தடையும் மருந்துகளின் தரம் மற்றும் அவற்றின் காலாவதி திகதி குறித்து சோதனையிடுவதற்கான எந்தவொரு பொறிமுறையையும் அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனம் கொண்டிருக்கவில்லை எனவும், இதுவொரு பாரதூரமான பிரச்சினை எனவும், இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் குறைவான தரம் குறித்து காலம் கடந்த பின்னரே அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனம் அறிந்துகொள்வதாகவும்  கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.

மருந்துகளின் தரம் குறித்து பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்தப் பின்னரே அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனம் அது குறித்து ஆராய்வதாகவும், அதற்கிடையில் குறித்த மருந்துகள் விநியோகிக்கப்பட்டு பயன்பாட்டிற்கும் உட்படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் மருந்து கொள்முதலில் பாரதூரமான சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதற்கு அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனம் மற்றும் அரச மருந்தக உற்பத்தி கூட்டுத்தாபனம் ஆகியவற்றிடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாமையே காரணமென்றும் அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.