3 சிங்கள சகோதரர்களின் உயிரை காப்பாற்ற, ஜனாதிபதி மைத்திரியின் பிரதிநிதியாக ரவூப் ஹக்கீம் சவூதி செல்கிறார்
(ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விசேட பிரதிநிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சவூதி செல்லவுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றன. யேமன் நாட்டு பிரஜை ஒருவரைக் கொலை செய்து அவரது உடைமைகளை கொள்ளையடித்தார்கள் என்ற குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் சவூதி அரேபியா நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையர் மூவரை தண்டனையிலிருந்த விடுவிக்கும் வகையில் சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே அவர் சவூதி செல்லவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2007 ஆம் ஆண்டு சவூதியில் இடம்பெற்ற இந்தக் கொலை, கொள்ளைச் சம்பவத்தையடுத்து மூன்று இலங்கையர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் தொடர்பான வழக்கு முடிவுறத்தப்பட்ட போது மூவரையும் குற்றவாளியாக கண்டு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
குருணாகல், மஹவைச் சேர்ந்த டப்ளியூ எம்.என.பீ. தென்னகோன் (33), தெஹிவளையைச் சேர்ந்த துஷார தினேஷ் பெரேரா (36),ராகமயைச் சேர்ந்த கே.ஏ. ஜீ.யூ. நாணயக்கார (34) வயது ஆகியோருக்கே மரண தண்டனை வழங்கப்பட்டது.

Post a Comment