Header Ads



சதாம் உசேனுக்கு சமையல்காரராய் பணியாற்றிய, காஜாமொய்தீனின் கண்ணீர் வாக்குமூம்


 என் நாட்டிற்காக நான் உயிர்விடலாம், ஆனால் நீங்க உயிர்விடக்கூடாது..! 


சதாம் உசேன் க்கு சமையல்காரனாய் பணியாற்றிய கீழக்கரை காஜாமொய்தீன்.


மிகச் சிறந்த மனிதரை அநியாயமா கொன்னுட்டாங்க. சதாம் உசேனுக்கு பல வருடங்கள் சமையல்காரராய் பணியாற்றிய கீழக்கரையைச் சேர்ந்த காஜாமொய்தீன் 'மிகச் சிறந்த மனிதரை அநியாயமா கொன்னுட்டாங்க...' கண்கலங்குகிறார் கீழக்கரையைச் சேர்ந்த காஜாமொய்தீன்.


மிகச்சிறந்த மனிதர் என்று அவர் குறிப்பிடுவது யாரைத் தெரியுமா? சதாம் உசேனைத்தான்!


சதாம் உசேனுக்கு பல வருடங்கள் சமையல்காரராய் பணியாற்றியவர் இவர். 


தற்போது திருவல்லிக்கேணியில் ஃபாஸ்ட்புட் ஹோட்டல் வைத்திருக்கிறார். காஜாமொய்தீனை புதுப்பேட்டையிலுள்ள அவரது வீட்டில் சந்தித்தோம். சதாம் அரண்மனயில் தனது சமயல் அனுபவங்களைக் கூறத் தொடங்கினார்.

''நான் சதாம் மாளிகையில் சமயல்காரராகச் சேர்ந்த முதல் நாள் சமயலறைக்கு அழைத்துச் சென்றார்கள்.


அங்கே டிப்டாப்பாக உடை அணிந்த ஒருவர் என்னிடம் காலை மதியம் இரவுக்கான மெனுக்களை ஆர்டர் கொடுத்தார். தினமும் இப்படி... நானும் அவற்றைச் செய்து கொடுத்துக் கொண்டிருந்தேன். அவரை நான் அரண்மனை மானேஜர் என்று நினத்திருந்தேன்.

எனக்கு அந்த நாட்டு மொழி தெரியாததால் உடன் பணிபுரிபவர்களிடம் கை ஜாடை மூலம் பேசிக்கொள்வேன்.


வேலையில் சேர்ந்து பதினைந்து நாட்கள் கழிந்த பிறகு ஓரளவிற்கு அவர்கள் மொழியைத் தெரிந்துகொண்டு 'தினமும் எனக்கு சமயல் ஆர்டர் கொடுக்கிறாரே... அவர்தான் மானேஜரா? என்றேன்.

'இல்லை அவர்தான் சதாம்' என்று பதில் வந்தவுடன் வியந்தேன்.


சதாமிற்கு இந்திய மக்கள் என்றால் உயிர். இந்திராகாந்தியை தன்னுடய சகோதரி என்றுதான் கூறுவார்.


இந்திரா சுடப்பட்டு இறந்தவுடன் ஈராக்கில் பணியாற்றிக் கொண்டிருந்த அத்தனை சீக்கியர்களையும் தன்னுடைய சிஸ்டரைக் கொன்றவர்கள் என்று குற்றம்சாட்டி சிறையில் வைத்துவிட்டார். 


பிறகு இந்திய தூதரகம் தலையிட்டு சுட்டவர்களுக்கும் இவர்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தெளிவுபடுத்திய பிறகு பத்து நாட்கள் கழித்து அனைவரயும் விடுவித்தார்.


அவருக்கும் நம்ம ஊர் சமையல் என்றால் ரொம்பப் பிடிக்கும். அதுவும் ரசம் என்றால் உயிர். விதவிதமான ரசம் செய்வேன். சாதத்தில் ஊற்றி விரும்பிச் சாப்பிடுவார்.


டீயில் சர்க்கரை போட்டுக் கொள்ள மாட்டார். அதற்குப் பதில் தேன் ஊற்றிச் சாப்பிடுவார். மதியம் சாதம் சிக்கன் ஃப்ரை காய்கறிகள்... இரவு 9 மணிக்கு ஃப்ரூட் சாலட் ரொட்டி சிக்கன் ஃப்ரை சாப்பிடுவார். 

பிரியாணி என்றால் அவருக்கு உயிர். அவருக்கு நான் 40 வகையான பிரியாணிகளைச் செய்து கொடுத்து அவர் பாராட்டைப் பெற்றிருக்கிறேன்.


ஒரு நாள் சதாம் என்னிடம் 'நான் டெல்லியில் சிஸ்டர் இந்திராகாந்தியச் சந்தித்தேன். அப்போது நடந்த அந்த விருந்தில், முக்கோண வடிவில் ஒரு ஸ்நாக் கொடுத்து இருந்தார்கள். அது ரொம்ப நல்லா இருந்தது. அதைச் செய்து தர முடியுமா?' என்று கேட்டார். அது என்னவென்று புரியாமல் குழம்பி ஒரு வழியாகக் கண்டுபிடித்துவிட்டேன். அது வேறொன்றுமில்ல. நம்ம சமோசாதான்!


ஒரு நாள் இருநூறு சமோசா செய்து கொடுத்து அனுப்பினேன். அவரது உறவினர்கள் அனைவரும் அதைச் சாப்பிட்டு அசந்து விட்டார்கள். சதாம் உசேன் அரண்மனயில் எந்தச் சமையல்காரரயும் ஆறுமாதத்திற்கு மேல் வைத்திருக்க மாட்டார்கள். காரணம் சதாமின் எதிரிகள் எப்படியாவது சமையல்காரரை ப்ரயின் வாஷ் செய்து பண ஆசைகாட்டி, உணவில் ஸ்லோ பாய்சன் கலக்கச் செய்துவிடுவார்கள் என்பதால்தான்.


ஒரு நாள் அரண்மனையிலிருந்து சமையலுக்கு வேண்டிய காய்கறிகள் வாங்க கடைவீதிக்குச் சென்றேன். நான் அரண்மனை காரில் போய் இறங்கியவுடன் சிலர் என்னிடம் வந்து 'எப்படியாவது சதாம் சாப்பாட்டில் ஸ்லோபாய்சன் கலந்துவிடு. உனக்குப் பலகோடி பணம் தருகிறோம்' என்றார்கள். நான் அதை முழுமயாக மறுத்து அவர்களைக் கடுமையாக எச்சரித்தேன். 


அவர்கள் மிரட்ட 'என் உயிரே போனாலும் அதைச் செய்ய மாட்டேன்' என்று கூறிவிட்டு காரில் ஏறி அரண்மனைக்குத் திரும்பிவிட்டேன். கொஞ்ச நேரத்தில் சதாம் என்ன அழைப்பதாகக் கூறினார்கள். நான் சென்றேன். 


என்னை அவர் இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டார். 'ரொம்ப நன்றி மொய்தீன் என்று அவர் சொன்னபோது, எனக்கு ஒன்றும் புரியவில்ல. பிறகுதான் தெரிந்தது என சட்டையில் மைக்ரோசிப் டேப் மாட்டிவிட்டு இருக்கிறார்கள் என்று.


இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு என் மீது அவருக்கு அபார நம்பிக்கை! வளைகுடா போரின்போது சதாம் என்னிடம் 'மொய்தீன் நீங்கள் உங்கள் நாட்டிற்குத் திரும்பி விடுங்கள். உங்களை நம்பி குடும்பத்தினர் நிறையப்பேர் இருப்பார்கள். தயவு செய்து கிளம்புங்கள்' என்றார். 


நான் மறுத்தேன். ஆனால் அவர்விடவில்லை. 'நான் எனது நாட்டிற்கும் மண்ணிற்கும் உயிரைவிடலாம். நீங்கள் விடக்கூடாது. கிளம்புங்கள்..!' என்று வற்புறுத்தினார்.


'அரண்மனையில் உங்களுக்கு வேண்டிய பொருட்களை எடுத்துச் செல்லுங்கள் தூக்கிச்செல்ல முடியாவிட்டால் ஒரு லாரியில் ஏற்றி அனுப்புகிறேன்' என்று கூறி அப்படியே செய்தார்.


நான் கிளம்புவதற்கு முன் ஒரு பெரிய பண்டலைக் கொடுத்து 'எந்தக் காரணம் கொண்டும் விமானத்தில் இதைப் பிரிக்கக் கூடாது. உங்கள் வீட்டுக்குப் போய்த்தான் பிரிக்க வேண்டும்' என்றார்.


எனக்காக தனி விமானம் ஏற்பாடு செய்து பாக்தாத்திலிருந்து மும்பை கொண்டு வந்து இறக்கிவிட்டுச் சென்றார்கள்.


வீட்டிற்கு வந்து சதாம் கொடுத்த பண்டலை பிரித்துப் பார்த்தேன். உள்ளே அமெரிக்க டாலர்கள்...'' கூறிவிட்டுக் கண்களைத் துடைத்துக்கொள்கிறார் காஜாமொய்தீன்.

No comments

Powered by Blogger.