Header Ads



வேலியே பயிரை மேய்வதா..??


(நவமணி பத்திரிகையில் இந்தவாரம் வெளியாகியுள்ள ஆசிரியர் தலையங்கம் இது)

ஓரு இறைமையுள்ள தேசத்தை தாங்கிநிற்கும் தூண்களில் நீதித்துறை பிரதானம் பெற்று விளங்குகிறது. மக்கள் தமது வாக்குள் மூலம் தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து சட்டத்தை உருவாக்குகின்றனர். உருவாக்கப்பட்ட இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் நீதிமன்றஙகள் மற்றும் நீதிபதிகளின் வகிபாகம் குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.

ஜனநாயக தூண் என அழைக்கப்படும் நீதித்துறை எந்தப் பக்கமேனும் சாயத் தொடங்கினால் அது அந்த தேசத்திற்கே சேதத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் அப்பாவி குடிமக்களும் பாதிப்படைகின்றனர்.
அந்தவகையில் மன்னார்  உப்புக்குள விவகாரம் நாடு பூராகவும் சூபிடித்துள்ளது. பாதிக்கப்பட்ட அப்பிரதேச முஸ்லிம்களுக்கு ஆதரவாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

தமது நியாயமான கோரிக்கைகளை பலவருடங்களுக்கு முன்னரே முன்வைத்திருத்த உப்புக்குள மீனவர்கள் தமக்கு நியாயம் கிடைக்கவில்லை என்பதால்தான் வீதியில் இறங்கினர். அமைதியாக போராட்டத்திலும் ஈடுபட்டனர் என்பது மன்னார் மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபையினதும், அப்பிரதேச மக்களினதும் வாதமாகும்.

மன்னார் உப்புக்குளம் முஸ்லிம்கள் தமது மீன்பிடித்துறையை மீளத்தருமாறு கேட்டபோது அதனை வழங்குவதற்கு கிறிஸ்தவ மீனவர்கள் மறுத்துள்ளனர். இந்நிலையில் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதியைப் பெற்றுத்தருமாறு கோரி அமைதியான ஆர்ப்பாட்டம் ஒன்றினை  சுமார் 3 மணித்தியாலம் மன்னார் நகரில் மேற்கொண்டனர். இங்கு அமைதியான ஆர்ப்பாட்டத்தில், கலந்துகொண்ட முஸ்லிம்களை விரட்டியடிக்குமாறும், அவர்கள் மீது சுடுமாறும் பொலீஸாருக்கு உத்தரவினை நேரடியாக வீதிக்குவந்து நீதவான் உத்தரவு பிறப்பித்ததன் எதிரொலியே அங்கு பதற்றமும், பீதியும் தொடர்வதற்கு காரணமாகியுள்ளது.

இலங்கை வரலாற்றில் நீதிபதியொருவர் நீதிமன்றத்தைவிட்டு வெளியேவந்து பொதுமக்களுக்கு சுடுமாறு உத்தரவு பிறப்பித்த சம்பவம் நிச்சயம் இதுவாகத்தான் இருக்கமுடியும். இதற்கு முன்னார் இவ்வாறு சம்பவம் நடைபெற்றதாக நாம் அறிந்திருக்கவில்லை. நீதிபதி மக்களை நோக்கி கைநீட்டுவதை தெளிவான வீடியோ ஆதாரங்களிலிருந்து அறியமுகிறது.

அத்துடன் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 40 தமிழ் சட்டத்தரணிகள் அறிக்கையொன்றையும் விடுத்துள்ளனர். அந்தஅறிக்கையிலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது,

''நீதிபதி நீதிமன்ற பிரதான நுழைவாயிலுக்கு அருகில் வந்து, கலகம் விளைவிப்பவர்களை முழங்காலுக்குக் கீழ் சுட்டாவது கைது செய்யும்படி ஓர் உத்தரவை பொலிஸாருக்குப் பிறப்பித்தார். நீதிபதியின் அந்த உத்தரவைப் பொலிஸார் நடைமுறைப்படுத்தாது, நீதிபதி அவர்களை உத்தியோகபூர்வ அறைக்குச் செல்லும்படியும் தாம் கும்பலைக் கைது செய்வதாகவும் தெரிவித்தனர். ஆனால் அப்படி எதுவும் நடக்காததன் காரணத்தாலேயே நீதிபதி மன்னார் இராணுவத்தின் உதவியைக் கோரியிருந்தார். இராணுவத்தினர் சுமார் 12.50 மணியளவில் வந்துசேர்ந்து கலகக்காரர்களை விரட்டியடித்தனர்'' எனக் கூறப்படுகிறது.

மன்னார் தமிழ் சட்டத்தரணிகளின் இந்த அறிக்கையிலிருந்து இரண்டு விடயங்கள் புலப்படுகிறது.

முதலாவது நீதிபதி பொதுமக்களை நோக்கி துப்பாக்கீச் சூடு நடத்தச் சொன்னது உண்மை என்பதும், இரண்டாவது நீதிகேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி மீனவர்களை இந்த கிறிஸ்த்தவ நீதிபதியும், தமிழ் சட்டத்தரணிகளும் கலகக்காரர்களாகவே நோக்குவது புலப்படுகிறது.

நியாயம் கேட்கும் அப்பாவி மீனவர்களை, கலகக்காரர்களாக எண்ணி அவர்களுக்கு எதிராக மன்னார் நீதித்துறை செயற்பட்டிருப்பதை இச்சம்பவங்களிலிருந்து நம்மால் அறியவும் முடிகிறது.

மன்னார் நீதித்துறையின் இந்த செயற்பாடுகளும், மன்னாரில் சட்டத்தரணிகளாக பணியாற்றும் சிலருடைய தகவல்கள் காரணமாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் கசப்பான தீர்மானங்களை மேற்கொண்டமை கவலைதரும் விடயமாகும். நெடுகிய வரலாற்றைக் கொண்ட இலங்கை சட்டத்தரணிகள் சங்கமானது மன்னாரில் நடைபெற்ற உண்மையான சம்பவங்களை அறிந்துகொள்ளாமலும், பாதிக்கப்பட்ட மக்களின் குரலுக்கு செவிமடுக்காமலும், அந்த மக்களிடம் இதுதொடர்பில் எந்தவித விசாரணைகளையும் மேற்கொள்ளாமல் ஒருபக்க தீர்மானத்தை மேற்கொண்டு அதற்கு ஏற்றவகையில் செயற்படுவது கண்டிக்கத்தக்கது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் இந்த செயற்பாட்டில் உடன்பாடோ அல்லது சமரசமோ காணாமயால்தான கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் சட்டத்தரணிகள் பலர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கவில்லை என்பதையும் நாம் இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

மன்னார் நீதிமன்றம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை நாங்கள் எவ்வாறு தவறு என்றும் உரத்துக் கூறுகிறோமோ அதேபோன்று அப்பாவி முஸ்லிம்கள் அமைதியாக மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தை அடக்க முயன்றவர்களையும், ஒருபக்க இனம் சார்ந்துநிற்கும் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயற்பாடுகளையும் கண்டனத்துடன் இங்கு பதிவு செய்கிறோம்.


 

1 comment:

  1. சகோதரர் என் எம் அமீன் அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரியட்டும்.

    முஸ்லிம்கள் இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் மின்னல் ரங்காவின் இடிவிழும் வாயைப் பார்த்துக்கொண்டு இருப்பது?
    முஸ்லிம்களுக்கென்று உள்ள ஊடகங்களைப் பலப்படுத்த வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.