Header Ads



அரபுநாட்டு வங்கிகளை குறிவைத்து இஸ்ரேல் + அமெரிக்க தயாரிப்பில் புதிய வைரஸ்..?

V

மத்திய கிழக்கு நாடுகளில் ஆயிரக் கணக்கான கணனிகளைப் பாதித்த வைரஸ் ஒன்றினைக் கண்டுபிடித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 'கெளஸ்' (Gauss) எனப் பெயரிடப்பட்டுள்ள இவ் வைரஸானது கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் முதல் கணனிகளைத் தாக்கி வருகின்ற போதிலும் சுமார் 2 மாதங்களுக்கு முன்னரே தம்மால் இதனைக் கண்டறிய முடிந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவைச் சேர்ந்த கணனிப் பாதுகாப்பு நிறுவனமான 'கெஸ்பர்  ஸ்கைலெப்' ஐச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களே இதனைக் கண்டுபிடித்துள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் 2500 கணனிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் ஆராய்ச்சியாளர்கள் இவ் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என அச்சம் வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக லெபனான் நாட்டு வங்கிகளையே இவ்வைரஸ் குறிவைத்துள்ளது. இவ் வைரஸானது 2009 ஆம் ஆண்டில் மத்திய கிழக்குப் பகுதியில் கண்டறியப்பட்ட 3 வகையான வைரஸ்களுடன் ஒத்துப் போவதாகவும், இதனைக் கட்டுப்படுத்திய சேர்வர்கள் கடந்த ஜூலை மாதம் நின்றுவிட்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஈரானின் அணுச் செறிவாக்கல் நிலைய கணனிகளைத் தாக்கிய ஸ்டக்ஸ்நெட்,  மற்றும் அண்மையில் கண்டறியப்பட்ட 'பிளேம்ஸ்' வைரஸ்களை உருவாக்கியவர்களுக்கும் 'கெளஸ்' இனை உருவாக்கியவர்களுக்கும் தொடர்பிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

'கெளஸ் வைரஸானது லெபனான் நாட்டு வங்கிகளை மட்டுமன்றி சிட்டி பேங், மற்றும் பே பேல் PayPal பாவனையாளர்களையும் குறிவைத்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. மேலும் இவ் வைரஸ் இணைய வங்கிச் சேவை தொடர்பான இரகசியத் தகவல்களை மின்னஞ்சல், சமூகவலையமைப்புகள் போன்ற மூலகங்களில் இருந்தும் திருடியுள்ளது.

ஸ்டக்ஸ்நெட்,  மற்றும்  'பிளேம்ஸ்'  வைரஸ்களானது ஈரானையே குறிவைத்து உருவாக்கப்பட்டிருந்தன. இதனை உருவாக்கியது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவே என பரவலாகக் குற்றஞ்சாட்டப்படுகின்றது. இந்நிலையிலேயே 'கெளஸ்' வைரஸ் தொடர்பான தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இவ்வைரஸ்கள் ஒரேவகையான கோடிங்களை கொண்டுள்ளதாகவும், இவற்றை உருவாக்கிய விதத்தில் நிறைய ஒற்றுமைகள் காணப்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இதனை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து உருவாக்கியிருக்கலாம் என சந்தேகமும் எழுகின்றது. இவை மத்திய கிழக்கு நாடுகளைக் குறிவைத்திருப்பதானது அச் சந்தேகத்திற்கு மேலும் வலுவூட்டுகின்றது

No comments

Powered by Blogger.