Header Ads



ஆசிரியைகள் நடனமாடுவது சரியா..? பிழையா..??


சிறுவர் தினமன்று ஆடிப்பாடி மகிழ்ந்த பாடசாலையொன்றின் ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படக் கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல பாடசாலையொன்றில் தேசிய சிறுவர் தின நிகழ்வின் பெண் ஆசிரியர்கள் மாணவியருடன் இணைந்து நடனமாடியிருந்தனர்.


இவ்வாறு நடனமாடிய ஆசிரியைகளுக்கு எதிராக மேல் மாகாண கல்வி திணைக்களம் ஒழுக்காற்று விசாரணை நடத்த தீர்மானித்துள்ளது.


எனினும், இந்த ஒழுக்காற்று விசாரணை தீர்மானத்திற்கு இலங்கை ஆசிரியர் ஒன்றியம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் என்பன கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.


பொருத்தமற்ற பாடலுக்கு ஆசிரியைகள் நடனமாடியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. 1940களில் வெளியான திரைப்படமொன்றின் பாடல் ஒன்றுக்கு ஆசிரியைகள் நடனமாடியிருந்தனர்.


பாடசாலையில் ஆசிரியைகள் நடனமாடுவது தவறு என எவரும்கூற முடியாது எனவும், நடன ஆசிரியர்கள் பிள்ளைகளுக்கு நடனமாடியே சொல்லிக் கொடுப்பதாகவும் இலங்கை ஆசிரியர் ஒன்றியத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


நடனமாடுவதற்காக தெரிவு செய்யப்பட்ட பாடல் ஆசிரியர்களினால் தெரிவு செய்யப்பட்டவை கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


சிறு சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்த அதிகாரிகள் தீவிர கரிசனை காட்டிய போதிலும் ஆசிரியர்கள், அதிபர்கள் அரசியல்வாதிகளினால் மிரட்டப்படுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.