Header Ads



திடீரென உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன், தந்தை கூறியுள்ள விடயம்


 சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் விளையாட்டு, விஞ்ஞான மற்றும் உடற்கல்வி பிரிவின் இறுதியாண்டு மாணவரொருவர் நேற்று -22- அதிகாலை பல்கலைக்கழக விடுதியில் உறங்கிக் கொண்டிருந்த போது திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் பலரை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.


இந்நிலையில், பல்கலைக்கழக விடுதியில் உறங்கிக்கொண்டிருந்த போது மர்மமான முறையில் உயிரிழந்த மாணவனின் சடலம் பரகஸ்தோட்டை,பல்பொல ஆசாரிகொட வீதியிலுள்ள அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.


சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பரீட்சைக்கு தோற்றிய பண்டாரகம பகுதியை சேர்ந்த 25 வயதுடைய ஹர்ஷ தனஞ்சய என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


பண்டாரகம தேசிய பாடசாலையின் பழைய மாணவரான இவர் பல்கலைக்கழகத்தின் கபடி அணியின் தலைவராகவும்,சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்துள்ளார்.


குறித்த மாணவன் கடந்த 20ஆம் திகதி வீட்டில் இருந்து விடுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளதாகவும், பின்னர் வீட்டிற்கு தெலைபேசி அழைப்பினை மேற்கொண்டு வீட்டில் ஏற்பட்ட கணினி பிழை தொடர்பாக தனது சகோதரியுடன் நள்ளிரவு வரை தொலைபேசியில் உரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனை தொடர்ந்து சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சிங்கராஜா விடுதியில் உள்ள அறையொன்றில் நண்பர்கள் சிலருடன் உறங்கச்சென்ற ஹர்ஷ தனஞ்சய, எழுந்திருக்காத காரணத்தினால் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.


மாணவனுக்கு உடலில் வெளிப்புற காயங்களோ அல்லது விஷக்கடிகளோ இல்லை எனவும், ஆனால் மரணத்திற்கான காரணத்தை சட்ட வைத்திய அதிகாரி தெரிவிக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மாணவனின் இறுதிக்கிரியைகள்

இந்நிலையில், உயிரிழந்த மாணவனின் இறுதிக்கிரியைகள் நாளை 23ஆம் திகதி பல்பொல பொது மயானத்தில் இடம்பெறவுள்ளதுடன்,மாணவனின் இறப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


இதேவேளை, உயிரிழந்த மாணவனின் தந்தை தெரிவித்துள்ளதாவது, தனது மகனுக்கு உடலில் இதுவரை எவ்வித நோயும் இல்லை,நித்திரைக்கு சென்ற மகன் இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.


எனது ஒரேயொரு மகனை நான் இழந்துவிட்டேன். மகன் சிறந்த விளையாட்டு வீரர், நரம்புகளில் எதுவும் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை வைத்தியர்கள் அவதானிக்க வேண்டும்.எனது நிலைமை இன்னொரு தந்தைக்கு ஏற்படக்கூடாது.எனது மகனின் மரணம் தொடர்பில் விசாரணை வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். 

No comments

Powered by Blogger.