Header Ads



பாகிஸ்தான் - இந்திய ஆட்டத்தில் கூகுள் தலைமை செயல், அதிகாரியை கவர்ந்த அந்த 3 ஓவர்கள்


அக்டோபர் 23ஆம் தேதியன்று ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி ஆடிய ஆட்டத்திலும் கோலி தன்னுடைய உறுதியான ஆட்டத்தை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்தார்.


இந்த ஆட்டத்தைக் குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, "தீபாவளி வாழ்த்துகள்! தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அனைவரும் சிறப்பாக பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.


நான் நேற்றைய ஆட்டத்தின் கடைசி மூன்று ஓவர்களை இன்று மீண்டும் பார்த்து பண்டிகையைக் கொண்டாடினேன். என்னவொரு போட்டி, என்னவொரு ஆட்டம்," என்று டீம் இந்தியா, டி20 உலகக் கோப்பை 2022 ஆகிய ஹேஷ்டேக்குகளோடு ட்விட்டரில் பதிவிட்டார்.


''நீங்கள் முதல் ஓவர்களை கட்டாயம் பார்க்க வேண்டும்'' என்று அதற்கு ஒருவர் பதிவிட்ட பின்னூட்டத்திற்கு, ''அதையும் பார்த்தேன்'' என்று அவர் பதிலளித்துள்ளார்.


நேற்றைய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஆனால், அடுத்து ஆடிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், அக்சர் பட்டேல் என்று முன்னணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர்.


இந்தியா 11வது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. முகமது நவாஸ் வீசிய 12வது ஓவரில் இருந்து தான் இந்தியா ரன்களை பெரியளவில் அடிக்கவே தொடங்கியது.


தன்னோடு நின்ற ஹர்திக் பாண்ட்யாவோடு இணைந்து விராட் கோலி தனது ஆட்டத்தைத் தொடங்கினார். கிரிக்கெட் வரலாற்றிலும் கோலியின் வாழ்விலும் மறக்க முடியாத நாளாக நேற்றைய தினம் இருக்கும் அளவுக்கு அவருடைய ஆட்டம் இருந்தது.


இந்திய அணி ஆடிய கடைசி மூன்று ஓவர்களும் மிக முக்கியமானது. கிரிக்கெட் ரசிகர்களை, குறிப்பாக இந்திய ரசிகர்களை, தங்கள் அணி வெல்லுமா வெல்லாதா என்ற பதட்டத்தை வைத்திருந்த அதே நேரத்தில், வெற்றிக்கான தங்கள் இலக்கை நோக்கிய அதிரடியையும் பேட்ஸ்மேன்கள் காட்டிக் கொண்டிருந்தனர்.


கடைசி ஓவர் இரண்டு அணிகளுக்குமே சவாலாக அமைந்தது. ஒரு ஓவருக்கு 16 ரன்கள் என்ற நிலையில் கடைசி ஓவரை எதிர்கொண்டது இந்திய அணி. முதல் பந்தில் ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்து ஆட வந்த தினேஷ் கார்த்திக் விக்கெட்டும் ஐந்தாவது பந்தில் பறிபோனது.


இறுதி ஓவரின் இரண்டு பந்துகள் முடிந்திருந்த நிலையில் 4 பந்துகளுக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் பாகிஸ்தான் அணியும் பதற்றத்தில் நோ பாலும் வைட் பாலுமாக வீசிக் கொண்டிருந்தது. கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது. மூன்றாவது பந்தில் இரண்டு ரன்களை மட்டுமே கோலியால் எடுக்க முடிந்தது.


ஆனால், அதற்கு அடுத்த பந்தில் கோலி சிக்சர் அடித்தார். அதேவேளையில் அந்த பந்து நோ பாலாகவே, பந்து செலவின்றி இந்தியாவுக்கு 7 ரன்கள் கிடைத்தன. பதற்றத்தில் இருந்த முகமது நவாஸ், மறுபடியும் 4வது பந்தை வைடாக வீசினார். பந்து செலவின்றி இந்தியாவுக்கு மீண்டும் ஒரு ரன்.


இப்படி இறுதி மூன்று ஓவர்களில் ஒவ்வொரு பந்தையும் பார்த்துப் பார்த்து செதுக்கி ஆடிய ஆட்டத்தில் இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றி மயிர்க்கூச்செறியும் போட்டியாக இருந்தது. அத்தகைய ஒரு போட்டியின் முக்கியமான ஓவர்களைதான் மீண்டும் பார்த்து இன்று பண்டிகை நாளைக் கொண்டாடியதாக கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தனது பதிவில் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.