Header Ads



2 வருடங்கள் ரணிலுக்கு ஆதரவு வழங்குவோம், தேர்தல் நடத்தப்பட்டால் வெற்றி நிச்சயம்


தவறுகளை திருத்திக் கொண்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றி நடை போடும் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.


ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாவலப்பிட்டி தொகுதி ஆசனக் கூட்டம் கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று (16.10.2022) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.


மேலும் கூறுகையில், “ஐக்கிய மக்கள் சக்தியால் நாவலப்பிட்டி நகரில் இன்று நடத்தப்பட்ட போராட்டத்தில் 148 பேர் மாத்திரமே பங்கேற்றனர்.


இன்று நடைபெறும் கூட்டம் மாவட்ட கூட்டம் அல்ல, ஒரு தொகுதி கூட்டமாகும். ஆனாலும் மக்கள் அணி திரண்டுள்ளனர்.


மக்கள் இன்னமும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன்தான் நிற்கின்றோம் என்ற தகவலை வழங்கியுள்ளனர். ஒரு சிலர் எம்மைவிட்டு சென்றிருக்கலாம்.


ஆனால் எமக்கான சக்தி பலமாகவே உள்ளது. நாவலப்பிட்டியவில் நடைபெறும் கூட்டத்தை குழப்ப வேண்டும், மக்களின் வருகையை தடுக்க வேண்டும் என்பதற்காக நாவலப்பிட்டியவில் எதிர்ப்பு போராட்டத்தை நடத்துமாறு தொகுதி அமைப்பாளருக்கு ஆணையிட்டுள்ளனர்.


தேர்தலுக்கு அஞ்சும் கட்சி எமது கட்சி அல்ல. எந்நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயார்.


கண்டி மாவட்டமும், நாவலப்பிட்டிய தொகுதியும் தயார் என்ற செய்தி இக்கூட்டம் மூலம் வழங்கப்படுகின்றது. தேர்தல் நடத்தப்பட்டால் வெற்றி நிச்சயம் என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றோம்.


நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. சவால்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறப்பாக எதிர்கொள்கின்றார். அடுத்த இரு வருடங்களுக்கு அவருக்கு ஆதரவு வழங்கப்படும்.


தவறுகளை திருத்திக்கொண்டு எமது கட்சி வெற்றி நடைபோடும்” என குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.