Header Ads



ஆட்டோ கட்டணம் உயருகிறது - பேருந்து கட்டணங்களை அதிகரிக்குமாறு சங்கங்கள் கோரிக்கை


முச்சக்கரவண்டிகளுக்காக பயணிகளிடமிருந்து அறவிடப்படும் பயணக் கட்டணத்தை 30 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒன்றிணைந்த முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் தொழில்துறை சங்கம் தெரிவிக்கின்றது.

இலங்கையில் நேற்றிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட நிலையிலேயே, முச்சக்கரவண்டி கட்டணங்களை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, முதலாவது கிலோமீற்றருக்காக அறவிடப்படும் கட்டணத்தை 30 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 50 ரூபாவாக காணப்பட்ட முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணம், 80 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனினும், இரண்டாவது கிலோமீற்றர் முதல் அறவிடப்படும் 45 ரூபா கட்டணத்தை அதிகரிக்கவில்லை என அந்த சங்கத்தின் செயலாளர் ரொஹண பெரேரா தெரிவிக்கின்றார்.

இதேவேளை, பேருந்துக்கட்டணங்களை அதிகரிக்குமாறு தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் மற்றும் அகில இலங்கை தனியார் பேருந்து நிறுவன சம்மேளனங்கள் ஆகியன கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.