பிரியந்தவின் கொலையை அரசியல்வாதிகள் சிலர் தமக்கு சாதகமாக்கி, மோதல்களை உருவாக்க முயற்சி - பொலிஸ்மா அதிபரை அவதானம் செலுத்த கோருகிறோம்
இன்றைய(05) ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்த கருத்துக்கள்.
சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தானின் சியோல்கோட் நகரில் இலங்கையைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இச்செயலை ஐக்கிய மக்கள் சக்தியாக நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.இவ்வாறான தீவிரவாத கும்பலின் இந்த தாக்குதலை நாம் பார்ப்பது முழு உலக மனித குலத்திற்கே எதிரான செயலகாத் தான்.மனைவி கணவனை இழந்துள்ளார், பிள்ளைகள் தந்தையை இழந்துள்ளனர்.அவரது குடும்பத்தில் உள்ள சகோதரர்கள் ஒரு சகோதரரை இழந்துள்ளனர்.அவர்கள் அனைவருக்கும் நீதியை வழங்க வேண்டிய பொறுப்பு பாகிஸ்தான் அரசுக்கு உள்ளது.இலங்கைச் சகோதரர் பிரியந்த குமாரவுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றத்தைச் செய்த குற்றவாளிகளுக்கு எதிராக பாகிஸ்தான் அரசாங்கம் எந்தவிதமான தளர்வும் இன்றி நாட்டின் சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
இரண்டு பிள்ளைகள், மனைவி ஆகியோருக்கு, கணவனரின் சம்பவத்தினால் அவர்களது குடும்பங்களின் எதிர்காலம் தொடர்பில் இக்கட்டான சூழலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்பதை புரிந்து கொண்டு இவர்களின் எதிர்கால வாழ்வுக்குத் தேவையான ஏற்ப்பாடுகளை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்திற்கும் வெளிவிவகார அமைச்சுக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.எனவே சில பொறுப்பு அரசாங்கத்திடம் உள்ளது.பாகிஸ்தான் அரசாங்கத்தின் தலையீட்டில் தொழிற்சாலையின் உரிமையாளர் ஊடாக குறித்த குடும்பத்திற்கு தேவையான ஏற்ப்பாடுகளை மேற்கொள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு தலையிட வேண்டும் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.இது அங்கீகரக்க முடியாத மனித குலத்திற்கு எதிரான தீவிரவாத செயலாகும்.எந்த நாட்டில் இருந்தாலும், எந்த பிரதேசத்தில் இருந்தாலும் மனித குலத்திற்கு எதிரான அனைத்து அட்டூழியங்களுக்கும் எதிராக நாம் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும்.
இவற்றை அடிப்படையாக வைத்து இலங்கையில் உள்ள வங்குரோத்து அரசியல்வாதிகள் சிலர் தமக்கு சாதகமாக சில பிரசாரங்களை கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் மேற்கொள்கின்றனர். எனவே இந்த நாட்டு பொலிஸ் மா அதிபரை இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.இத்தகைய தோல்வியடைந்த அரசியல் குழுக்கள் நமது நாட்டில் சமூகங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்ப்படுத்த இந் நிகழ்வை சாதகமாக பயன்படுத்தவும், நம்மிடையே சந்தேகத்தையும் அவநம்பிக்கையையும் உருவாக்கி நமக்குள் மோதல்களையும் உருவாக்கலாம்.இந்த நாட்டின் ஐக்கியத்தை பாதுகாக்க பொலிஸ் மா அதிபரும் அரசாங்கமும் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
நிலைமையைப் பாதுகாக்கவும், சட்டத்தை பாராபட்ச மற்ற விதத்தில் அமுல்படுத்துமாறும், குறிப்பாக பாகிஸ்தான் அரசை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.
Post a Comment