10 ஆயிரம் கிலோ பாவனைக்கு உதவாத சீனி பிடிபட்டது - அரபு இராஜ்ஜியத்திலிருந்து இறக்குமதி எனக்கூறி விற்பதற்கு தயாராக இருந்தனர்
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகில் உள்ள, தனியாருக்கு சொந்தமான களஞ்சியசாலை ஒன்றிலிருந்து 10 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான பாவனைக்கு உதவாத சீனியை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்தியாவிலிருந்து இந்த பெருந்தொகை சீனி இறக்குமதி செய்யப்பட்டிருந்த நிலையில், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறி இதனை விற்பனை செய்வதற்கு தயாரான நிலையில் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான களஞ்சியசாலையில் இந்த மோசடி இடம்பெற்று வருவதாகத் தம்புள்ளை நகரசபைக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. இதன்படி தம்புள்ளை மேயர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் களஞ்சியசாலைக்கு சென்று சோதனையிட்டபோது பெருந்தொகையான சீனியை மீட்டுள்ளதோடு, மக்கள் பாவனைக்கு உதவாத ஏனைய உணவுப் பொருள்களையும் பொலிஸார் அங்கிருந்து மீட்டுள்ளனர்.
துணிகளை துவகை்கும் சவர்க்காரத்தோடு அரசி, கொத்தமல்லி ஆகியவற்றையும் களஞ்சியப்படுத்தி வைத்திருந்ததாகவும், இதனை தொடர்ந்து தனியாருக்கு சொந்தமான களஞ்சியசாலைக்குப் பொலிஸார் சீல் வைத்துள்ளதோடு, அதன் உரிமையாளருக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment