Header Ads



சீனாவின் கடன்பொறியில் வீழ்ந்தது உகண்டா - ஒரேயொரு சர்வதேச விமான நிலையத்தையும் இழக்கும் அபாயம்


கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதால் உகண்டா, தமது ஒரேயொரு சர்வதேச விமான நிலையமான என்டெப்பே சர்வதேச விமான நிலையத்தைச் சீனாவிடம் இழந்துள்ளதாக ஆபிரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வ்ங்கியிடமிருந்து கடனைத் திரும்பச் செலுத்த முடியாத காரணத்தினால் இவ்விமான நிலையம் சுவீகரிக்கப்படவுள்ளதாகக் குறித்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

என்டெப்பே விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்காக உகண்டாவினால் இந்தக் கடன் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, 2015 ஆம் ஆண்டில், சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி (EXIM) வங்கி, உகண்டாவிற்கு 207 மில்லியன் டொலரை இரண்டு சதவீத வட்டி அடிப்படையில் கடனாக வழங்கியிருந்தது.

இதனிடையே உகண்டா தனது கடனைத் திருப்பச் செலுத்த முடியாமல் போனால், என்டெப்பெ விமான நிலையத்தைச் சீனா கையகப்படுத்திக் கொள்ளலாம் என்று இந்தக் கடன் ஒப்பந்தத்தின் சரத்தொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், உகண்டா ஜனாதிபதி யோவேரி முசேவெனி, உயர்மட்ட குழுவினரைச் சீனாவுக்கு அனுப்பியுள்ளார்.

அபாயகரமான குறித்த சரத்தை நீக்கக் கோரி இராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள போதிலும், சீனா தமது ஒப்பந்த விதிகளைத் தளர்த்த முடியாது என மறுத்துள்ளதாகத் தெரியவருகிறது.

அதன்படி, உகண்டா தனது ஒரேயொரு சர்வதேச விமான நிலையத்தைச் சீனாவிடம் இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

மேலும் இந்தக் கடன் ஒப்பந்தத்தில் எந்த சர்வதேச பாதுகாப்பும் இல்லாமல் இருப்பதால் பிற சர்வதேச அமைப்புகளின் உதவியையும் உகண்டா கோர முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, உகண்டா விமான நிலையத்தைச் சீனா கையகப்படுத்துவதாக வெளியான தகவலை உகண்டாவின் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1976 ஆம் ஆண்டு பிரான்ஸ் விமானம் கடத்தப்பட்டமை மற்றும் பணயக்கைதிகளான பயணிகள் காப்பாற்றப்பட்டமை ஆகிய சம்பவங்களுக்காக, உலகப் புகழ்பெற்ற 'ஒப்பரேஷன் தண்டர்போல்ட்' என்ற மீட்பு நடவடிக்கை பழைய என்டெப்பே விமான நிலையத்திலிருந்தே செயற்படுத்தப்பட்டிருந்தது.

அக்காலக்கட்டத்தில் உகண்டாவை சர்வாதிகாரி இடி அமீன் ஆட்சி செய்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. Good
    சீனாவின் அடிமை நாடுகளின் வரிசையில் பாக்கிஸ்தான், இலங்கை, உகண்டா…

    ReplyDelete
  2. உகண்டா ஏற்கனவே அதன் ஒரேயொரு விமானநிலையத்தை சீனாவிலிருந்து கடனாகப் பெற்ற வெறும் இருபத்திமூன்று மில்லியன் டொலர்களை திருப்பிச் செலுத்த வழியின்றி அதன் விமானநிலையத்தை சீனாவிடம் ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்பட்டு அதன் விமானநிலையமும் சீனாவசம் சென்றுவிட்டது. இலங்கை அதன் எத்தனையோ பெறுமதியான பொதுமக்களின் சொத்துக்கள் மிகவிரைவில் சீனாவசம் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அந்த நிலைமையை ஏற்படுத்த யார் காரணம்?

    ReplyDelete

Powered by Blogger.