Header Ads



திகனயில் பயங்கர ஆயுதங்களுடன் அமெரிக்க கடற்படையின் முன்னாள் சிப்பாயும் மற்றுமொரு குற்றவாளியும் கைது


துப்பாக்கி, துப்பாக்கி ரவைகள் மற்றும் Walkie-talkie உள்ளிட்ட தொலைத்தொடர்பு சாதனங்களுடன் கண்டி – திகன பகுதியில் கைது செய்யப்பட்ட அமெரிக்க கடற்படையின் முன்னாள் சிப்பாயும் ஏற்கனவே குற்றவாளியாக காணப்பட்ட மற்றுமொருவரும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் நேற்று முன்தினம் (30) பகல் திகனையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றுக்கு அமைய, கண்டி – திகன பகுதியிலுள்ள VICTORIA RANGE எனும் சொகுசு குடியிருப்பு தொகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

அதிக என்ஜின் வலுக்கொண்ட மோட்டார் சைக்கிள்கள் பொருத்தப்படுவதாகக் கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத உபகரணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதன்போது, இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

100 துப்பாக்கி ரவைகள், ரம்போ வகை கத்தி, துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் தொலைநோக்கி, துப்பாக்கியொன்று மற்றும் 04 சிறு Walkie-talkie-களும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

இலக்கத் தகடுகளற்ற இரண்டு மோட்டார் சைக்கிள்கள், இலக்க தகடுகளுடன் கூடிய 04 மோட்டார் சைக்கிள்கள், அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் வாகன இலக்கத் தகடொன்று, ஒரு கடவுச்சீட்டு மற்றும் 7 இலட்சம் ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 44 வயதான சமிந்த அலோசியஸ் பண்டார என்பவர், 2004 ஆம் ஆண்டு முதல் கடந்த ஜனவரி மாதம் வரை அமெரிக்க கடற்படையில் VF-143 படையணியில் சேவையாற்றியமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வர்ஜீனியாவிலுள்ள VF-143 படையணி, விசேட தாக்குதல் பயிற்சிபெற்ற சிப்பாய்களைக் கொண்ட பிரிவாகும்.

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் கடற்படை சிப்பாய், தெஹிவளை – அத்திடிய பகுதியில் நிரந்தர முகவரியுடையவர் என்பதும் கண்டி திகனையில் வாடகைக்கு வீடொன்றை வாங்கியுள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள மற்றைய நபர், டெரன்ஸ் மரியோ பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவர் குற்றச்செயல்கள்தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்டு, கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவராவார். இவர் நாவலயில் நிரந்தர வதிவிடத்தைக் கொண்டவர் என்பதும் தெரியவந்துள்ளது

சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி ரவைகள் 45 ACP வகை துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படுபவை என்பதோடு, அந்த துப்பாக்கி அமெரிக்க இராணுவம் பயன்படுத்தும் துப்பாக்கி வகையை சேர்ந்தது என்பதும் பொலிஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும் இன்று தெல்தெனிய மாவட்ட நீதிபதியும் நீதவானுமாகிய LJ.V. பெர்னாண்டோ முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பகிரங்க விசாரணையொன்றை முன்னெடுக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி ரவைகளை அரச இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பி, அதன் அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதிபதி இதன்போது உத்தரவிட்டுள்ளார்.

1 comment:

  1. Srilanka police don't think bad...
    Please An inquest will reveal many facts...

    ReplyDelete

Powered by Blogger.