அரசாங்கத்துடன் நாங்கள் சண்டை பிடிப்பது உண்மைதான், அரசாங்கத்தை தூய்மைப்படுத்த தம்முடன் இணையுமாறு கம்மன்பில அழைப்பு
அரசாங்கத்துடன் நாங்கள் சண்டைப் பிடிப்பதை மக்களும் தெரிந்துக்கொண்டுள்ளனர் எனத் தெரிவித்த ,அமைச்சர் உதய கம்மன்பில, தேர்தல் மேடைகளில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகவே அரசாங்கத்துடன் சண்டைப் பிடிக்கின்றோம். சண்டை பிடிப்பது உண்மைதான் என்றார்.
கொழும்பில், நேற்று (14) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அப்பால் செல்லுமாக இருக்குமாயின்,
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக, அரசாங்கத்துக்குள் எதிர்கட்சியாக செயற்படுவோமென கடிதம் மூலம் மக்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளோம்.
இந்த உறுதிப்படுத்தலை, நானும், அமைச்சர் விமல் வீரவன்சவும், 2020 ஜூலை 18ஆம் திகதி,தேர்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட போது செய்திருந்தோம்.
எனவேதான், வழங்கிய அந்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக நாம் இவ்வாறு செயற்படுகிறோம் என்றார். கடந்தாண்டு பொதுத் தேர்தலில் இலங்கை தேர்தல் வரலாற்றில் ஒரு புதிய சுற்றுச்சூழல் எண்ணக்கருவை தோற்றுவித்து, தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு விருப்பு வாக்குகளுக்கும் மரமொன்றை நடுவதாக உறுதியளித்திருந்தேன்.
குறித்த தேர்தலில் போஸ்டர், பொலித்தீன், பட்டாசு அற்ற, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட்டேன். அதன் பயனாக 1,36,331 விருப்பு வாக்குகளையும் பெற்றுக்கொண்டேன் என்றார். எப்போதும் சுற்றாடலுக்காக அர்ப்பணிப்படன் செயற்படும், தேர்தல் மேடைகளில் சுற்றாடல் குறித்து அதிகம் பேசிய தனக்கு, சுற்றுசூழலுக்கும் சுற்றாடலுக்கும் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும் அமைச்சான எரிசக்தி அமைச்சே வழங்கப்பட்டுள்ளது என்றார்.
எனவே ,சுற்றாடலை தூய்மையாக்க எம்முடன் இணைந்து மர நடும் நிகழ்ச்சிக்கு ஆதரவை வழங்குமாறும், அரசாங்கத்தை தூய்மைப்படுத்த அரசாங்கத்தின் தவறுகளை தவறென கூற தம்முடன் இணையுமாறு அமைச்சர் உதய கம்மன்பில இதன்போது அழைப்பையும் விடுத்தார்.
Post a Comment