Header Ads



ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய, 9 மாதங்களுக்குள் கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பாலத்தை நிர்மாணிக்க நடவடிக்கை


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆலோசனைக்கமைய, 9 மாதங்களுக்குள் கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பாலத்தை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இலங்கையின் வீதி கட்டமைப்பின் புதிய தகவல்கள் எனும் தலைப்பில் இன்று முற்பகல் ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்தினூடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய, அனைத்து வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் உரிய காலத்திற்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து கிளை வீதிகள் மற்றும் உள்நுழைவு வீதிகளையும் அபிவிருத்தி செய்து அவற்றை பிரதான வீதி கட்டமைப்புடன் தொடர்புபடுத்துவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் R.W.R.பிரேமசிறி குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வரையான 41 கிலோமீட்டர் நீளமுடைய பகுதி வெகு விரைவில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது.

அத்துடன், 2024 ஆம் ஆண்டிற்குள் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் எனவும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

கொழும்பு நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாகவுள்ள அனைத்து சந்திகளையும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – புத்தளம் வீதியை அபிவிருத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர், சிலாபம் நகரம் மற்றும் அந்த வீதியின் ஒரு பகுதி மழை நீரினால் பாதிக்கப்பட்டுள்ளதால் அதனை தடுப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

நீர், மின்சாரம் போன்ற அவிருத்தி வேலைத்திட்டங்களை செயற்படுத்தும் போது, நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்ட வீதிகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்வதற்காக புதிய உத்திகளும் கையாளப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.