Header Ads



பேராசிரியர் ஹுசைன் இஸ்மாயில் மறைவு - முஸ்லிம் சமூக கல்வித்துறையில் பேரிழப்பு - இம்தியாஸ் Mp


இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும், இலங்கை தேசிய கல்வி ஆணைக்குழுவின் முன்னால் உறுப்பினருமான, முஸ்லிம் சமூகத்தின் மூத்த கல்வியியலாளருமான மதிப்பிற்குரிய கல்வித் துறை பேராசிரியர் ஹுசைன் இஸ்மாயில் அவர்களின் மறைவு இலங்கை முஸ்லிம் சமூகத்தில் குறிப்பாக கல்வித் துறையில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். 

சிறந்த மார்க்கப்பற்றுடன் இஸ்லாத்தின் மாறாத நடுநிலை சிந்தனையுடன் முஸ்லிம் சமூகத்தின் அவ்வப்போதைய காலங்களில் தோன்றும் கல்வி மற்றும் சமூக பிரச்சிணைகளை மிக நுட்பமாக பகுப்பாய்வு செய்து அதற்கேற்ப தீர்வுகளை முன்வைத்து சமூக விவகாரங்களை ஒழுங்கமைப்பதில் முன்னோடியாக செயற்பட்ட ஒரு அறிவாளுமையாகும். முஸ்லிம் சமூகத்தில் சமூக ஒழுங்கள் காலத்திற்கு ஏற்ப மேம்பட வேண்டும் என்பதில் உறுதியாக நம்பிக்கை கொண்டிருந்த அவர் மாற்றத்தை வேண்டி நிற்கும் பரப்புகளில் தைரியமாக தனது நிலைப்பாடுகளை வெளிப்படையாக முன்வைத்துச் செயற்பட்டவர். வணிக இலாப நோக்கிலான ஹலால் பிரச்சிணை எழுந்த போது பக்கசார்பற்ற யதார்த்தமான நிலைப்பாடுகளை முன்வைத்தார்.மானிட தன்மை கொண்ட சமூகப் பெறுமானம் இலங்கை முஸ்லிம் கல்விப் பரப்பிலிருந்து கட்டியொழுப்பப்பட வேண்டும் என்பதிலும் அரச வளங்கள், பாராபட்சமற்ற நிதி ஒதுக்கீடுகள் என்பனவற்றிற்குள் கல்வி சிக்கிவிடக்கூடாது என்பதையும் தொடர்ச்சியாக வலியுறுத்தினார்.

1964 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் தலைவராக 2005 ஆம் ஆண்டிலிருந்து செற்பட்ட போது கல்விமான்கள் மற்றும் தேசிய பிராந்திய கட்சி சார்ந்த அரசியல்வாதிகளை ஒன்று கூட்டி கல்வி சார்ந்த முன்னேற்ற முன்மொழிவுகளை அரசாங்கத்திற்கு முன்வைத்தார்.நாட்டின் நாலா பாகங்களிலிருந்தும் முஸ்லிம் சமூகத்தின் கல்வி சார்ந்த பிரச்சிணைகளை அடையாளப்படுத்துவதற்கும் அனைத்து மாணவர்களும் கல்வியைப் பெறுவதற்கும் பெற்றுக் கொள்வதற்கும் உரிமை உண்டு என்பதையும் வறுமை காரணமாக பாடசாலையை விட்டு இடை விலகியோரை மீள இனைத்துச் செயற்படுத்துவதிலும் கூடிய அக்கறையாக செயற்ப்பட்டவர்.அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டில் இவரின் பங்களிப்பு காத்திரமானது. இலங்கை முஸ்லிம்களின் கல்வி மீதுள்ள தடைகள் மற்றும் சவால்கள் தொடர்பிலும் பேராசியர் பல்வேறுபட்ட தளங்களிலும் ஆய்வுகளை மேற்கொண்டு பல தீர்வு முன்மொழிவுகளையும் வழங்கியுள்ளார். 


கற்றல், கற்பித்தல்,பாடவிதானம்,ஏனைய புறவயச் செயற்பாடுகள்,கல்வி நிர்வாகம் எதிர் கொள்ளும் பிரச்சிணைகள்,கலாசார விழுமியங்களை பேனுவதிலுள்ள பிரச்சிணைகள்,பாடசாலை இடப் பிரச்சிணைகள் உள்ளடங்களாக அடையாளப்படுத்தி அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு சார்பாக அரசாங்கத்தின் கவனத்தை திருப்ப ஆவனம் செய்ய பங்களிப்புச் செய்தார்.இலங்கை முஸ்லிம் சமூகத்தின் கல்விப் பரப்பில் அவரின் வகிபாகம் கனதியானது.

2003-2009 காலப்பகுதியில் இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துனை வேந்தராக கடமையாற்றிய சமயம் பல்கலைகலகலகத்தின் பன்முக முன்னேற்றத்திற்கு அயராத பங்களித்தார். அரபு மொழி மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பீட உருவாக்கத்தில் இவரின் பங்களிப்பு மகத்தானது.பல்கலைக்கழ விரிவுரையாளர்களை தகைமைப்படுத்துவதில் கூடிய அக்கறைகாட்டி செயற்பட்டார்.

சிவில் சமூக கட்டமைப்பு பல்தரப்பு துறை சார்ந்தவர்களை ஒன்றினைத்து முற்போக்காக செயற்படுவதாலயே நமது இருப்பு தங்கியுள்ளது என்பதை வலியுறுத்தியவர்.இலங்கை முஸ்லிம்களின் கல்வி முயற்சியாண்மை அதனூடாக சமூக பொருளாதார முயற்சியாண்மைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்.முஸ்லிம் சமூகத்தின் கல்வி நிறுவனங்கள் மரபு ரீதியான கட்டமைப்பிலிருந்து அடைவுகளை பெறும் முயற்சியாண்மை சார்ந்த முயற்சிகளுக்கும் அதன் பிரகாரம் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கு பிறகு இணக்கப்பாடு எட்டப்படும் பரிந்துரைகளின் பிரகாரம் புதிய சமூக ஒழுங்குகளை வகுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற விடயத்தை ஆழமாக வலியுறுத்தியவர். 

சிறந்த சிந்தனையாளர்,கல்விமான் என்பதைத் தாண்டி நற்பண்பாளர்.தேடலுள்ள ஆய்வாளர்.இலக்கியம் மீது நேசம் கொண்டவர்.

எனது பிறப்பிடமான களுத்தறை பேருவளையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் பேருவளைப் பிரதேசத்தின் கல்வி முன்னோடிகளில் சிரேஷ்டமானவர்.பேருவளை பிரதேசத்தின் கல்வி,சமய,சமூக மாற்ற முயற்சியில் காத்திரமான வகிபாகத்தை நிலைப்படுத்தியவர்.பேருவளை பிரதேசத்திலிருந்து முதன் முதலாக பல்கலைக்கழ துனை வேந்தராக நியமிக்கப்பட்ட கல்வியலாளர்.பேருவளை தர்கா நகர் இஷாஅதுல் இஸ்லாம் அநாதைகள் காப்பகத்தின் தலைவராக இறுதி வரை செயற்பட்டார். பேருவளை சிறந்த ஒர் கல்வியாலுமையின் இடைவெளியை சந்தித்துள்ளது.கல்விப் பின்புலம் கொண்ட குடும்பத்தை விட்டுச் சென்றுள்ளார்.

என்னுடனும் எனது குடும்பத்துடன் நல்ல உறவுகளை பேனியவர்.

எனது தமிழ் மொழியெயர்பு நூலான “இதயம் பேசுகிறது” எனும் நூல் வெளியீட்டின் போது நூல் பற்றிய திறனாய்வை திறம் பட மேற்கொண்டதை மரியாதையுடன் நினைவு கூறுகிறேன். 

மலேஷியா மலாய் பல்கலைக்கழகத்தின் முன்னால் சிரேஷ்ட ஆய்வாளரும் மலேஷியா இஸ்லாமிய விஞ்ஞான பல்கலைக்கழகத்தின் மேதகு பேராசிரியருமாகவும் செயற்பட்டார். கல்வித் துறை பேராசிரியர் என்பது போல சமூக இயங்கியலைத் தீர்மானித்த ஒருவர்.

எல்லாம் வல்ல இறைவன் இவர்களின் மண்ணறை வாழ்வை சிறக்கச் செய்து உயர் சுவனப் பேறுகளை வழங்கிட உள்ளார்ந்து  பிரார்த்தனை செய்வோம்.

இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்

பாராளுமன்ற உறுப்பினர்

14.10.2021

No comments

Powered by Blogger.