Header Ads



எமது கருத்துக்களை அரசு கண்டுகொள்ளவில்லை, அதன் விளைவே தற்போது பாரிய பிரச்சினையாக மாறி இருக்கின்றது


இரசாயன உரம் இறக்குமதி செய்யத் தடை விதித்த ஆரம்பத்திலேயே, அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பு தொடர்பாக அரசுக்கு எடுத்துக்கூறி இருந்தோம். எனினும், எமது கருத்துக்களை அரசு கண்டுகொள்ளவில்லை. அதன் விளைவே தற்போது பாரிய பிரச்சினையாக மாறி இருக்கின்றது.

இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலனறுவை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வுவொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

அரசு இரசாயன உரம் இறக்குமதி செய்யத் தடைவித்தது கடந்த போகத்தின் ஆரம்பத்திலாகும். இதன்போது ஊடகங்கள் ஊடாக விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டதுடன் விவசாயிகள் மத்தியிலும் அமைதியின்மை ஏற்பட்டு வீதிகளில் சிறிதளவில் போராட்டங்கள் நடத்து வந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

அரசின் இந்தத் தீர்மானம் நல்லதாக இருந்தாலும் இது அவசரப்பட்டு செய்யக்கூடிய விடயமல்ல என்பதை இதன் ஆரம்பத்திலேயே அரசில் இருக்கும் பொறுப்பு வாய்ந்த அனைவருக்கும் தெரிவித்திருந்தேன்.

விசேடமாக இரசாயன உரத்தில் இருந்து சேதன உரத்துக்கு மாற்றுவதாக இருந்தால் அதனை உடனடியாக மேற்கொள்ள முடியாது. நானும் அமைச்சராக, ஜனாதிபதியாக இருந்து முன்மாதிரி நடவடிக்கையாக சேதன உரத்தில் விவசாயம் செய்தேன்.

அதனால் இந்த நடவடிக்கையை 10 வருடங்கள் அல்லது 5 வருடங்களுக்கான வேலைத்திட்டமாகப் படிப்படியாகவே மேற்கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக் கூறியிருந்தேன். அதன்பின்னர் எமது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்றக் குழு இது தொடர்பாக அரசில் இருக்கும் தலைவர்களுக்குத் தெளி வுபடுத்தி இருந்தது.

அத்துடன் உரப் பிரச்சினை மற்றும் அதனால் ஏற்பட்டிருக்கும் கவலைக்குரிய நிலைமைகள் தொடர்பாக தெளிவுபடுத்தி கட்சி என்ற அடிப்படையில் அரசுக்குக் கடிதம் மூலம் அறிவுறுத்த நடவடிக்கை எடுத்தோம். எமது பொறுப்பை நாங்கள் சரியாக அரசுக்குத் தெரிவித்திருந்தோம்.

எனினும், எமது கருத்துக்கள், ஆலாேசனைகளை அரசு கருத்தில்கொள்ளவில்லை. அதனால்தான் தற்போது உரப் பிரச்சினை பாரிய பிரச்சினையாக மாறி இருக்கின்றது என்றார்

No comments

Powered by Blogger.