Header Ads



ரஞ்சன் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி துரிதமான தீர்மானத்தை எடுப்பார் - சஜித்


பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தற்போது பாராளுமன்றத்துக்கு வருகை தராமையானது பாரிய குறைபாடாகும் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மோசடி, ஊழல், இலஞ்சம் ஆகிவற்றுக்கு எதிராக எப்போதும் முன்னணியில் இருக்கும் ரஞ்சன் ராமநாயக்க விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு இன்று (26) விஜயம் மேற்கொண்டு ரஞ்சன் எம்.பியைச் சந்தித்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்விடயத்தைத் தெரிவித்தார்.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக பண மோசடி, இலஞ்சம் அல்லது பொதுச் சொத்துக்களை திருடியதாக ஒருபோதும் குற்றம் சாட்டப்படவில்லை என்றும் அவர், மக்களுக்காக தன்னிடம் இருப்பதைக் கூட தியாகம் செய்த மனிதாபிமானி என்றும் சஜித் தெரிவித்தார்.

அவர், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் என்றும், எத்தனையோ அனர்த்தங்களின் போது துளியும் யோசிக்காமல் மக்கள் சார்பாக முன்வந்தவர் ரஞ்சன் ராமநாயக்க என்று எதிர்க்கட்சித் தலைவர் நினைவு கூர்ந்தார். 

ரஞ்சன் ராமநாயக்க உயர்கல்வியில் பட்டம் பெறும் நோக்கில் செயற்படுவதாகவும், அதற்கான சூழலை உருவாக்குவது மனிதாபிமானத்தின் பெயரால் செய்யப்பட வேண்டிய ஒன்று எனவும் சஜித் தெரிவித்தார்.

அனுதாபம், மனிதாபிமானம் மற்றும் சுகாதாரக் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு ரஞ்சன் ராமநாயக்கவின் சார்பில் தலையிடுமாறு நீதியமைச்சரிடம் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

ரஞ்சன் எம்.பியின் விடுதலைக்காக ஜனாதிபதியிடம் தாம் பல முறை கோரிக்கை முன்வைத்ததாகவும், அவரின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி துரிதமான தீர்மானத்தை எடுப்பார் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.