போதைப் பொருள் சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸ் அதிரடிப்படை கடமைக்கு இடையூறு -bஞானசாரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
(எம்.எப்.எம்.பஸீர்)
போதைப் பொருள் சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் விவகாரத்தில், பொதுபல சேனா பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் 2022 ஜனவரி 21 இல் விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (22) தீர்மானித்தது.
கொழும்பு மேலதிக நீதிவான் காஞ்சனா நெரஞ்சலா டி சில்வா இதர்கான உத்தரவை பிறப்பித்தார்.
பீ 73854 எனும் இலக்கத்தின் கீழ் தொடுக்கப்பட்டுள்ள குறித்த வழக்கில், முறைப்பாட்டாளர் தரப்பின் சாட்சியாளர்களுக்கும் இதன்போது மன்றில் ஆஜராக நீதிவான் அறிவித்தல் விடுத்தார்.
வெலிக்கடை பொலிஸ் பிரிவில் 2017 ஆம் ஆண்டு போதைப் பொருள் சுற்றி வலைப்புக்கு சென்ற பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக ஞானசார தேரருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கடந்த 2017 ஜூன் 21 ஆம் திகதி ஞானசார தேரர், புறக்கோட்டை மிஹிந்து மாவத்தையில் உள்ள திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவுக்கு வாக்கு மூலம் அளிக்க சென்றார்.
அதன் போது அங்கு ஞானசார தேரரை விசாரணைக்கு உட்படுத்திய பொலிஸார் அவரை குறித்த விவகாரம் தொடர்பில் கைது செய்தனர். இதனையடுத்து அன்றைய தினமே, புதுக்கடை 4 ஆம் இலக்க நீதிவான் நீதிமன்றம் முன் அவர் ஆஜர் செய்யப்பட்டிருந்தார்.
குற்றம் தொடர்பிலான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி கமல் சில்வாவின் ( தற்போது கிழக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிச் மா அதிபர் ) கீழ் செயற்பட்ட திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பிலான பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் பிரியந்த லியனகே ( தற்போது யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர்), பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜனக குமார ஆகியோர் அடங்கிய குழுவினர் ஞானசார தேரரைக் அப்போது கைது செய்திருந்தனர்.
இவ்வாறு நீதிமன்றுக்கு அழைத்து செல்லப்பட்ட கலகொட அத்தே ஞானசாரர் அப்போது கொழும்பு மேலதிக நீதிவான் ( தற்போதைய கொழும்பு பிரதான நீதிவான்) புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் ஆஜர்ச் செய்யப்பட்டிருந்தார்.
அதற்கு முன்னதாக சர்வதேச சிவில், அரசியல் இணக்கப்பட்டு சட்டத்தின் விதி விதானங்களின் பிரகாரம் இரகசிய, பாதுகாக்கப்பட்ட பீ அறிக்கை ஒன்றூடாக இவ்வழக்கில் அறிக்கை சமர்பித்திருந்த பொலிஸார் ஞானசார தேரரை மன்றில் ஆஜர் செய்த போது அந்த குற்றச்சாட்டுக்களை இடையீட்டு மனுவொன்ரூடாக தாக்கல் செய்த மேலதிக அறிக்கையால் மாற்றியமைத்தனர்.
அதன்படி இவ்வழக்கில் பொலிஸ் உத்தியோகத்தறின் கடமைக்கு இடையூறு விளைவித்து அச்சுருத்தியமை தொடர்பில் மட்டும் ஞானசார தேரருக்கு எதிராக இலங்கை தண்டனை சட்டக் கோவையின் 140,183,186,344 ஆகிய அத்தியாயங்களின் கீழ் குற்றச் சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து இவ்வழக்க்கில் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ரொக்கப் பிணையிலும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும் செல்ல ஞானசார தேரரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது.
இவ்வாறான பின்னனியிலேயே குறித்த வழக்கின் விசாரணைக்கு தற்போது திகதியிடப்பட்டுள்ளது.
Virakesari
Post a Comment