Header Ads



எரிவாயு விலையை 1,200 ரூபாவால் அதிகரிக்க கோரிக்கை - தமக்கு 10,500 கோடி ரூபா நட்டம் என்கிறது நிறுவனம்


சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை 1,200 ரூபாவினால் அதிகரிக்க வேண்டும் என லிட்ரோ பாதுகாப்பு தேசிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்த விலை அதிகரிப்பு முழுமையாக இடம்பெறாவிடத்து விலை இடைவித்தியாசத்தை திறைசேரியே பெறுப்பேற்க நேரிடும் என அந்த ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

லிட்ரோ நிறுவனத்தின் சேவையாளர்கள் அடங்கிய குறித்த ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் ஒரு மெட்ரிக் டன் எரிவாயுவின் விலை தற்போது 800 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் கிரயம் 2,021 ரூபாவாகும்.

எவ்வாறாயினும் 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 1,493 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

கப்பலுக்கான கட்டணம், காப்பீட்டு தொகை உள்ளிட்ட ஏனைய அத்தியாவசிய சேவைகளுக்காக 700 ரூபா செலவாகின்றது.

இதற்கமைய எரிவாயு 2,800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும்.

லிட்ரோ நிறுவனம் கடந்த 9 மாதங்களாகச் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்காமையினால் நிறுவனத்துக்கு 10,500 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரையில் லிட்ரோ நிறுவனம் பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதோடு நவம்பர் மாதமளவில் திறைச்சேரியிலிருந்து நிதி கிடைக்காவிடத்து எரிவாயுயை கொண்டு வர முடியாத நிலை ஏற்படும் எனவும் அந்த ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments

Powered by Blogger.