Header Ads



காஷ்மீரின் விடுதலைக்காக போராடிய முக்கிய, தலைவர் சையது அலி ஷா கிலானி காலமானார்


காஷ்மீரின் முக்கிய தலைவரான சையது அலி ஷா கிலானி ஸ்ரீநகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 92.

நீண்டகாலமாக அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார்.

காஷ்மீரில் இந்திய ஆட்சிக்கு எதிராக நீண்ட காலமாகக் குரல் எழுப்பி வந்தவர் கிலானி. கடந்த 11 ஆண்டுகளில் பெரும்பாலான காலத்தை வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.

கிலானியின் வீட்டைச் சுற்றி இந்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. சாலைத் தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. கம்பி வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன.

கிலானி மரணமடைந்ததைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு விதிக்கப்படலாம் என்றும், இணைய சேவை துண்டிக்கப்படலாம் என்றும் கருதப்படுகிறது.

ஹூரியத் மாநாடு அமைப்பைத் தொடங்கியவர்களுள் ஒருவர் கிலானி. இப்போது அந்த இயக்கம் முடங்கியிருக்கிறது.

கிலானியின் மரணத்துக்கு ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் மெஹபூபா முஃப்தி இரங்கல் தெரிவித்துள்ளார். "பல்வேறு அம்சங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர் மீது பெரிதும் மரியாதை வைத்திருந்தேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருக்கிறார்.

நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அனுமதி

கிலானியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இதனிடையே உள்ளூர் மக்கள் அனைவரும் கிலானியின் வீட்டுக்கு அருகேயுள்ள மசூதி அருகே வருமாறு ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்யப்பட்டு வருவதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

எனினும் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும்படி காவல்துறை வலியுறுத்தியுள்ளது. இந்திய ராணுவத்தின் கவச வாகனங்கள் தெருக்களில் சென்று கொண்டிருக்கின்றன.

15 ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்தவர்

ஜம்மு- காஷ்மீர் மாநிலமாக இருந்தபோது அதன் சட்டப் பேரவையில் 15 ஆண்டுகள் உறுப்பினராக இருந்தவர் சையது ஷா கிலானி. 1972-1977, 1987 என மூன்று முறை சோப்பூர் தொகுதியில் இருந்து சட்டப் பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

ஜமாத் - இ - இஸ்லாமி கட்சி சார்பில் அவர் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு வந்தார். தற்போது அந்தக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 1989-ஆம் ஆண்டு ஆயுத வன்முறைகள் தொடங்கிய பிறகு பிற ஜமாத் - இ - இஸ்லாமி கட்சியின் உறுப்பினர்களுடன் கிலானியும் ராஜிநாமா செய்தார்.

1993-ஆம் ஆண்டில் 20 மத மற்றும் அரசிய்ல கட்சிகளை ஒருங்கிணைத்து ஹுரியத் மாநாடு என்ற பெயரில் புதிய அமைப்பு தொடங்கப்பட்டது. 19 வயதான மிர்வைஸ் உமர் ஃபரூக் அதன் நிறுவனத் தலைவராக இருந்தார். பின்னாளில் கிலானி அதன் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

2003-ஆம் ஆண்டு ஹுரியத் மாநாடு அமைப்பை விட்டு கிலானியும் அவரது ஆதரவாளர்களும் விலகி, புதிய அமைப்பை உருவாக்கினர். அதற்கு ஹுரியத் (கிலானி) என்று பெயரிடப்பட்டது. அதன் தலைவராக கிலானி இருந்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் அந்த அமைப்பை விட்டும் கிலானி விலகினார்.


No comments

Powered by Blogger.