Header Ads



மனித உரிமைகள் மீதான உள்நாட்டுப் பொறிமுறைகள் முன்னேற்றம் - வெளிவிவகார அமைச்சரினால் ஐ.நா. பிரதிநிதிக்கு விளக்கம்


ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் திருமதி. ஹனா சிங்கர் ஹம்டியை வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கொழும்பில் உள்ள வெளிநாட்டு அமைச்சில் வைத்து செப்டம்பர் 02ஆந் திகதி மரியாதை நிமித்தமாக  வரவேற்றார்.

நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்கான தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகள் மற்றும் தேவைகளின் பின்னணியில் இலங்கை மற்றும் ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மற்றும் நாட்டிற்கான ஐ.நா. குழு ஆகியவற்றுக்கு இடையேயான ஆக்கபூர்வமான மற்றும் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்காக ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கு அமைச்சர் பீரிஸ் நன்றிகளைத் தெரிவித்தார். கோவிட் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான இலங்கையின் தற்போதைய முயற்சிகள் மற்றும் இது தொடர்பாக எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் அவர் ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கு விளக்கினார். உலக சுகாதார தாபனம் மற்றும் யுனிசெஃப் உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பணிகளையும், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட உதவிகளையும் அவர் மேமலும் பாராட்டினார். அமைதி, நீதி மற்றும் நிறுவனங்களைக் கையாளும் நிலையான அபிவிருத்தி இலக்கு 16 உட்பட மனித உரிமைகள் மீதான உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலமான  முன்னேற்றம் குறித்தும் ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கு அமைச்சர் விளக்கினார்.

ஐ.நா.வுடனான அடுத்த 5 வருடங்களுக்கான ஒத்துழைப்புடன் இலங்கையின் முன்னுரிமைகளை உள்ளடக்கிய நிலையான அபிவிருத்தி ஒத்துழைப்புக் கட்டமைப்பு 2023 - 2027 ன் கீழ் இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையே தயாராகி வரும் செயன்முறை குறித்து ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அமைச்சருக்கு விளக்கினார். இது 2030 இல் நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை நோக்கிய  ஐக்கிய நாடுகள் நிலையான அபிவிருத்தி ஒத்துழைப்புக் கட்டமைப்பின் இறுதி சுழற்சியாகும். அமைதி மற்றும் அபிவிருத்தியை அடைந்து கொள்வதற்கான இலங்கையின் முயற்சிகளின் அனைத்து அம்சங்களிலும் நாட்டிற்கான ஐ.நா.  குழுவின் ஒத்துழைப்பை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

No comments

Powered by Blogger.