கொரோனா ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வதற்காக, புதிதாக தெரிவு செய்யப்பட்ட கிண்ணியா சம்பந்தப்பட்ட தெளிவூட்டல்
பல சவால்களுக்கு மத்தியில் கிண்ணியாவில் Covid-19 ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்காக இலங்கை இராணுவத்தினருடன் இணைந்து கிண்ணியா பிரதேச சபை கௌரவ தவிசாளர் முஹம்மட் நிஹார் உட்பட பிரதேச சபையின் அனைத்து உறுப்பினர்களும், பிரதேச செயலாளர் திரு அனஸ், திருகோணமலை மாவட்ட அரசு முகவர் (GA) திரு சமன் குமார கிண்ணியா அபிவிருத்தி குழுத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் மற்றும் சிவில் சமூகத்தின் பல பிரதிநிதிகள் விசேடமாக சகோதரர் அப்துல் அஸீஸ் ஆகியோர் அதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
Covid-19 ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்காக தெரிவுசெய்யப்பட்ட கிண்ணியா பூமியின் அபிவிருத்தித் திட்டங்கள் சம்பந்தமாக கலந்துரையாடுவதற்கு உத்தியோக பூர்வமாக கிண்ணியா பிரதேச சபையின் தவிசாளரினால் ACJA அமைப்புக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று இன்னும் முன்னிலையில் சேவை செய்து கொண்டிருக்கும் தேசிய அமைப்புக்களுடன் சேர்ந்து 01/09/2021 அன்று ஒரு உத்தியோகபூர்வ ஒரு விஜயத்தை மேற்கொண்டது.
இந்த விஜயத்தில் அனைத்து ஒருங்கிணைப்புகளையும் மேற்கொண்ட ACJA முக்கிய உறுப்பினர் சகோதரர் அப்துல் ரஷீட், யட்டினுவர பிரதேச சபை உறுப்பினரும் கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களின் இணைப்பாளருமான வசீர் முக்தார், அகில இலங்கை YMMA பேரவையின் தேசிய தலைவர் கௌரவ சஹீத் எம் ரிஸ்மி, Zam Zam அமைப்பின் பணிப்பாளர்களுல் ஒருவரான சகோதரர் அல்ஹாஜ் கியாஸ் ரவ்ப், கண்டி தேசிய வைத்தியசாலை அபிவிருத்திக் குழு அங்கத்தவர் சகோதரர் முஹம்மத் ரிஸ்வி, பஸ்லான் பௌன்டேசன் தலைவர் சகோதரர் பஸ்லான் பாருக் மற்றும் சகோதரர் அப்துல் ஹாலிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கிண்ணியாவில் ஜனாஸா நல்லடக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட 9.9 ஏக்கர் அரச காணியை பார்வையிட்ட எமது குழுவினர் இந்த செயல் திட்டத்திற்கு பொறுப்பாக இயங்கக்கூடிய இராணுவ உயர் அதிகாரிகளை சந்தித்து அபிவிருத்தி சம்பந்தப்பட்ட விடயங்களை கலந்தாலோசித்தது. அதைத்தொடர்ந்து கிண்ணியா பிரதேச சபைக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு தவிசாளரின் தலைமையின் பிரதேச செயலாளருடனும் இந்தத் திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் அனைத்து பங்குதாரர்களுடனும் அபிவிருத்தி பணிகள் சம்பந்தமாக மிக விரிவாக ஆராய்ந்து அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்தும் ஒரு செயல் திட்டம் சம்பந்தமாக இணக்கம் காணப்பட்டது.
இந்த இடத்துக்கு இலங்கை இராணுவம் மற்றும் தொழில்நுட்பக் குழு வின் அனுமதி பெறப்பட்டு இருந்தாலும் உத்தியோகபூர்வமாக சுகாதார அமைச்சின் அனுமதியை பெற்றுக்கொள்வதில் இருந்த தாமதத்தை கண்டறிந்து சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் மற்றும் இந்த செயல் திட்டத்திற்கு பொறுப்பாக இயங்கும் இராணுவ உயர் அதிகாரி, பிரதேச செயலாளர், திருகோணமலை மாவட்ட அரசு முகவர் GA ஆகியோருக்கு இடையிலான ஓர் ஒருங்கிணைப்பினை உடனடியாக ஏற்படுத்தி காணப்பட்ட சில முட்டுக்கட்டைகளை தகர்ப்பதற்கான நடவடிக்கைகளும் இந்த சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்டன.
அனுமதி பெற்றுக் கொள்வதற்காக காணப்பட்ட சில பின்னடைவுகள் முட்டுக்கட்டைகள் சம்பந்தமாக உடனடியாக நீதி அமைச்சர் கௌரவ அலி சப்ரி அவர்களினதும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தவ்ஃபீக் அவர்களினதும் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து நேற்றைய முன்தினம் 02/09/21 காலை அனுமதிக்கான பத்திரங்கள் சுகாதார அமைச்சில் தாக்கல் செய்யப்பட்டதை கௌரவ அமைச்சர் அலி சப்ரி அவர்கள் உறுதி செய்தார். இதைத்தொடர்ந்து இந்த திட்டத்துக்கான சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ அனுமதி அடுத்த வாரம் வழங்கப்படும் என்பதனை சுகாதார அமைச்சு திருகோணமலை மாவட்ட GA திரு சமன் குமார தொடர்பு கொண்டு நேற்றைய தினம் உறுதிப்படுத்தியுள்ளது.
கிண்ணியா பிரதேச சபை கௌரவ தவிசாளரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த பூமியை ஜனாஸாக்களை அடக்கக் கூடிய விதத்தில் செப்பனிட்டு அபிவிருத்தி செய்வதற்காக வேண்டி உத்தேசிக்கப்பட்ட திட்டத்தின் ஒரு பாரிய பொறுப்பை இங்கு விஜயம் செய்த அமைப்புக்கள் பொறுப்பேற்று ஏறக்குறைய 45 இலட்சம் பெறுமதியான ஒருவேளை திட்டத்தினை முன்னெடுப்பதற்காக கௌரவ தவிசாளர் உடன் உடன்பட்டுள்ளது.
இதற்கமைய துரிதமாக இங்கு இருக்கக்கூடிய அபிவிருத்தி பணிகளை நிறைவு செய்து இராணுவத்தின் எதிர்பார்ப்பும் வேண்டுகோளுக்கும் இணங்க வரக்கூடிய தினங்களில் ஜனாஸாக்களை கிண்ணியாவில் நல்லடக்கம் செய்வதற்காக இந்த பூமியை தயார் செய்யும் நிமித்தம் கௌரவ தவிசாளரின் தலைமையின் கீழ் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
வசீர் முக்தார்
யட்டினுவர பிரதேச சபை உறுப்பினர்
Post a Comment