Header Ads



இலங்கை கடற்படைக்கு அவுஸ்திரேலியா பாராட்டு


இலங்கைக்கான அவுஸ்திரேலிய பதில் உயர்ஸ்தானிகர் அமண்டா ஜுவெல், பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரட்னவை சந்தித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பிராந்திய பாதுகாப்பின் ஸ்திரத்தன்மையைப் பேண, நாடுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் உட்பட, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பாரம்பரியமற்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவம் என்பன தொடர்பாகவும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த விடயங்கள் தொடர்பில் அனைத்து பிராந்திய நாடுகளுடனும் இலங்கை முழுமையாக ஒத்துழைக்கும் என பாதுகாப்பு செயலாளர் உறுதியளித்தார்.

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை சுரண்டவோ, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடவோ, இலங்கை நிலப்பரப்பை ஒரு தளமாக பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்றும் பாதுகாப்புச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை முடக்குவதற்கு நாட்டின் கடற்படை மற்றும் ஏனைய சட்ட அமுலாக்க பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து விதமான நடவடிக்கைகளையும் அவுஸ்திரேலிய பதில் உயர்ஸ்தானிகர் இந்த சந்திப்பின்போது பாராட்டினார்.

சட்டவிரோத ஆட்கடத்தலை முறியடிக்க கடற்படையினர் மேற்கொண்ட முயற்சிகள் அவுஸ்திரேலிய தூதுக்குழுவினரால் பாராட்டப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேநேரம், இரு நாடுகளுக்கிடையில் நிலவும் பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதாக இரு தரப்பினரும் இந்த சந்திப்பின்போது உறுதியளித்துள்ளனர்.

1 comment:

  1. பாராட்டிப் பாராட்டி இருக்க வேண்டியதுதான்.கழுதைகளை வளர்க்க இன்றே கற்றுக்கொண்டால் எதிர்காலத்தில் கழுதைப்பயணங்களுக்கு தயாராகலாம். ஹைப்பிரைட், பென்ஸ்கார்களை கோழி அல்லது ஆடு வளர்க்கப் பயன்படுத்தலாம்.

    ReplyDelete

Powered by Blogger.