Header Ads



நாட்டை மூடுமாறு மல்வத்து, அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை


நாட்டின் தற்போதைய நெருக்கடியான நிலையில், மக்களை பாதுகாக்கும் நோக்கில் விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனை மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் ஒரு வாரமேனும் நாட்டை முடக்குமாறு மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால், நாட்டு மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வரக்காகொட ஶ்ரீ ஞானரத்ன தேரர் ஆகியோரின் கையொப்பத்துடன் அனுப்பபட்டுள்ள கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரணங்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துச் செல்வதை சுட்டிக்காட்டியுள்ள மகாநாயக்க தேரர்கள், புதிய பிறழ்வு மற்றும் வேகமாக தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு தாம் எதிர்நோக்கியுள்ள அசௌகரியத்தை சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதனைத்தவிர எதிர்வரும் மாதங்களில் நாட்டின் சுகாதாரத் துறையில் ஏற்படக்கூடிய பாரதூரமான சுகாதார நிலைமை குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்த காலத்தில் மக்களை பாதுகாப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தலைமைத்துவ ரீதியில் எடுத்த காத்திரமான வேலைத்திட்டங்களை மகாநாயக்க தேரர்கள் இந்த கடிதத்தில் பாராட்டியுள்ளனர்.

தற்போது தடுப்பூசியை ஏற்றி மக்களை பாதுகாக்க முன்னெடுக்கப்படும் செயற்றிட்டத்தை மகாநாயக்க தேரர்கள் வரவேற்றுள்ளனர்.

இந்த நோய் தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு, ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் சக்தியும் தைரியமும் கிடைக்க வேண்டும் எனவும் மகாநாயக்க தேரர்கள் ஆசி வழங்கியுள்ளனர்.

1 comment:

  1. இதற்கு முன்பாக எத்தனை தடவை முடக்கப்பட்டன என்ன பயன்!? மாற்றமாக கூலி தொழிலாளிகள் அன்றாட உணவில்லாமல் வாழ்ந்தது மட்டும்தான் மிச்சம்!

    ReplyDelete

Powered by Blogger.