Header Ads



கொள்ளுப்பிட்டியிலுள்ள வெளிநாட்டு நிறுவனமொன்றின் மீது தாக்குதல் நடத்த முயன்றவர் கைது


கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள சர்வதேச தொடர்புகளைக்கொண்டுள்ள வெளிநாட்டு நிறுவனமொன்றின் மீது தாக்குதல் நடத்த முயன்ற நபரொருவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தமது நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக கைப்பேசி குறுஞ்செய்தி ஊடாக தமக்கு தகவலொன்று கிடைத்துள்ளதாகவும், அது தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறும் குறித்த நிறுவனத்தின் அதிகாரியொருவரால் கொள்ளுப்பிட்டி காவல்நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்த முறைப்பாடு தொடர்பில் கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், பின்னர் விசாரணைப்பொறுப்பு கொழும்பு குற்றவியல் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார். 

அதன்படி முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து, கண்டி, ஹிந்தகல பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான நபரொருவர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபர் முன்னாள் விமானப்படை அதிகாரியொருவர் எனவும் அவர் ஒழுக்கம் மீறல் குற்றத்துக்காக பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்றும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.இந்நபர் தற்போது, ஹோமாகம, பனாகொட பிரதேசத்தை தற்காலிக வசிப்பிடமாகக்கொண்டவர் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றவியல் பிரிவினர் மற்றும் கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

2 comments:

  1. கண்டியைச் சேர்ந்த நபரொருவர் என்றால், அந்தப் பெயர் வெளிப்படுத்தப் படாது விட்டால்,இப்போது எல்லோருக்கும் புரிந்திருக்கும் அவர் யாரென்று. பாவி பிடிபட்டு விட்டான். இல்லாது விட்டால் பழி யார் மீது விழுந்திருக்கும்? இரு சமூகங்கள் சேர்ந்து கொத்தித்து எழும்பி விடுவார்கள், கூடவே தோ டடக்காரனும்.

    ReplyDelete

Powered by Blogger.