Header Ads



நாட்டில் மாதாந்தம் 6, 500 மெற்றிக் டன் பால்மா பயன்படுத்தப்படுகின்றது - தட்டுப்பாடும் நீடிக்கிறது


சந்தையில் தற்போது பால்மாவுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இறக்குமதி செய்யப்படும் பால்மா அத்தியாவசிய பொருளாக மாறியுள்ள நிலையில் சந்தையில் போதுமான பால்மா இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

இந்தவிடயம் குறித்து Hiru செய்தி சேவை ஆய்வு ஒன்றினை முன்னெடுத்தது. நாட்டில் மாதாந்தம் 6, 500 மெற்றிக் டன் பால்மா பயன்படுத்தப்படுகின்றது. 

பால்மா இறக்குமதிக்காக வருடாந்தம் 360 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படுகின்றது. 

எனினும் தற்போதைய கொவிட்-19 வைரஸ் பரவலுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரம் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் வெளிநாட்டு இருப்பு குறைவடைந்தமையினால் பால்மா இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறான பின்னணியில் சர்வதேச சந்தையில் பால்மாவின் விலையும் அதிகரித்துள்ளது.

அத்துடன் கப்பலுக்கான கட்டணம் அதிகரித்துள்ளதோடு அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. 

இதன் காரணமாக பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு பால்மா நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரியுள்ளன. எனினும் அரசாங்கத்தினால் இதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. 

இந்தவிடயம் குறித்து கருத்துரைத்த பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஒன்றிணைந்த உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய, கடந்த ஜனவரி மாதம் முதல் நுகர்வோர் அதிகார சபையிடம் பால்மா விலையை அதிகரிக்குமாறு கோரியுள்ளதாக குறிப்பிட்டார்.

அத்துடன் நிறுவனங்களுக்கு மாதாந்தம் ஆயிரத்து 500 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாகவும் தெரிவித்தார். 

இந்தவிடயம் குறித்து கருத்துரைத்த கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டை சார்ந்த கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத், மக்கள் இது குறித்து அச்சமடைய தேவையில்லை என தெரிவித்தார். 

கொவிட்-19 பரவலுக்கு மத்தியில் சில பொருட்களை நாட்டுக்கு இறக்குமதி செய்வதில் தட்டுப்பாடுகள் நிலவுகின்றன. 

அந்த அடிப்படையில் பால்மா இறக்குமதியிலும் தட்டுப்பாடு நிலவக்கூடும். எனினும், போதுமான பால் கையிருப்பில் உள்ளதோடு அவற்றை மக்களுக்கு பகிர்வதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத்   தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.